குடிநீர் பிரச்சினைகு தீர்வு பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் வேலணை கண்ணபுரம் பகுதி மக்கள் கோரிக்கை!

Thursday, February 14th, 2019

வேலணை கண்ணபுரம் பகுதி மக்கள் வரையறை செய்யப்பட்டு வழங்கப்படும் குடிநீர் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

வேலணை பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களதும் அவர்கள் சார்ந்த ஏனைய செயற்பாடுகள் தொடர்பிலும் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இதன்போது கண்ணபுரம் பகுதி மக்களுடனான சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது வேலணை பிரதேசமானது குடிநீருக்காக பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. ஆனாலும் கடந்த காலத்தில் தாங்கள் அமைச்சராக இருந்தபோது எமது பகுதிக்கு வழங்கப்பட்ட இந்த குடிநீர் தற்போது குறுகிய நேர வரையறை முறைமை ஊடாக எமக்கு வழங்கப்படுகின்றது.

எமது பகுதியில் சுமார் 45 க்கு மேற்பட்ட குடும்பங்கள் இந்த குழாய் வழியூடாக கிடைக்கும் நீரை நம்பியே வாழ்ந்துவருகின்றனர்.

இந்த குழாயூடாக வரும் குடிநீரை நாம் ஒவ்வொரு குடும்பமும் 20 லீற்றர் வரையே பெற்றுக் கொள்ள முடிகின்றது. அதுவும் பல தடவைகள் இரண்டு நாட்களுக்கு ஒருதடவையே பெற்றுக் கொள்ளும் நிலை காணப்படுகின்றது. இதனால் நாம் குடிநீருக்காக பல துன்பங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

அந்தவகையில் நாம் குடிநீருக்காக நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருவதற்கான வழிவகைகளை மேற்கொண்டு தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

குறித்த மக்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் துறைசார் தரப்பினரது கவனத்திற்கு குறித்த பிரச்சனையை கொண்டு சென்று விரைவில் அதற்கான தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: