கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்களின் நலனுக்காக செயற்படுத்துங்கள் – கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!
Sunday, August 19th, 2018கிடைக்கப்பெறுகின்ற வாய்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக உருவாக்கி எமது மக்களின் வாழ்வியல் தேவைப்பாடுகளை வெற்றி கொள்வதற்கான முயற்சிகளை ஒவ்வொருவரும் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர்கள், பிரதேச நிர்வாக செயலாளர்கள் உதவி நிர்வாக செயலாளர்கள் ஆகியோருடனான சந்திப்பில் தொலைபேசியூடாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்தகாலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் எமது மக்களின் நலன்களுக்காக பல்வேறுபட்ட சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து அவற்றை சிறந்தமுறையில் மக்களிடம் எடுத்துச்சென்று நாம் சாதித்துக் காட்டியுள்ளோம். ஆனாலும் அவ்வாறான அரசியல் நிலைமை தற்போது காணப்படவில்லை.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலையைப் பார்க்கின்றபோது, நாளுக்கு நாள் எமது மக்களின் அடிப்படைத் தேவைகளும் எதிர்பார்ப்புக்களும் அதிகரித்துக் கொண்டு வருவதையே காணக்கூடியதாகவுள்ளது.
இந்நிலையில் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எல்லாம் எமது மக்களின் நலன்களுக்கானதாக மாற்றி அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகளை நாம் முன்னெடுப்பதுடன் மேலும் பல சாதகமான வழிகளை உருவாக்கி அவற்றினூடாகவும் எமது மக்களின் நலன்சார் தேவைகளை பூர்த்திசெய்துகொடுக்க நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|