கள் உற்பத்திகளில் சட்டவிரோத நடவடிக்கைகளே அதிகம் – டக்ளஸ் தேவானந்தா
Friday, June 23rd, 2017மலையகப் பகுதிகளைப் பொறுத்தவரையில் 18 வயதுக்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களில் நூற்றுக்கு 60 முதல் 70 வீதமானவர்கள் மதுப் பாவனைக்கு உட்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் இந்த மதுப் பாவனை வளர்ச்சிக்கு போத்தலில் அடைக்கப்பட்டுள்ள தென்னங் கள் என்ற போர்வையில் சந்தைக்கு விடப்படுகின்ற மது பானமே ஒரு பிரதான காரணமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு தரவுகளைப் பார்க்கின்றபோது, நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 38 இலட்சம் லீற்றர்கள் மேற்படி கள் விற்பனையாகியுள்ளன. அதே போன்று ஹற்றன் பகுதியில் 25 இலட்சத்து 70 ஆயிரம் லீற்றர்கள் விற்பனையாகியுள்ளன.
இந்த கள்ளின் விலை ஏனைய மதுபான வகைகளின் விலைகளைவிடக் குறைந்துள்ள காரணத்தினாலம், அதிக போதையைத் தருவதாலும், இதனை நாடுகின்றோர் தொகை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. எனினும், இந்தக் கள் உற்பத்திகள் தொடர்பில் முறையாக ஆராய்ந்து பார்க்கப்படுகின்றதா? என்பது குறித்த கேள்விகள் எழுகின்றன. இந்தக் கள்ளினைப் பயன்படுத்துவோர் வயிற்றுழைவு உட்பட பல்வேறு நோய்களுக்கு உடன் ஆட்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
கள் உற்பத்தியினைப் பார்க்கின்றபோது, உற்பத்தித் திகதி, காலவதியாகும் திகதி, அதனுள் அடக்கப்பட்டுள்ள சேர்வைகள், இரசாயனப் பதார்த்தங்களின் உள்ளடக்கம் என்பவை எதுவுமே அற்ற நிலையில், சட்டவிரோத உற்பத்திகளாகவே சந்தைப் படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய ஓர் உற்பத்தியை வெளிப்படையாக விற்பனை செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு என்ன பதில் எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் அறிவித்தல் தொடர்பாக கடந்த 22ஆந் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|