கல்முனை விவகாரத்திற்குக்கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்புக் குறித்து பேசுவது எதற்கு? டக்ளஸ் எம்.பி. கேள்வி!
Friday, July 26th, 2019
கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போக நினைப்பது போல், ஒரு கல்முனை விவகாரத்திற்குக்கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்புக் குறித்து இந்த சபையில் பேச விளைந்திருப்பது,.. தமிழ் மக்களையும் ஏமாற்றி,.. உங்களையே நீங்களும் ஏமாற்றும் செயல் என்றே தமிழ் மக்கள் இன்று பேசத் தொடங்கியுள்ளார்கள்.
முப்பது வருடங்களாகப் போராடி எதைச் சாதித்தீர்கள் என்று கேட்டு எமது விடுதலை இயக்கங்களின் களமுனைத் தியாகங்களைக் கொச்சைப்படுத்தினார் உங்கள் தலைவர்களில் ஒருவர்.
அப்போதாவது நீங்கள் அது குறித்து உங்கள் தலைமையை நோக்கி ஒரு கேள்வி எழுப்பியிருந்தால்,.. அந்த முப்பது வருடப் போராட்டத்தில் ஈடுபட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை நீங்கள் உச்சரிப்பதற்குத் தகுதியானவர்கள் என்று அர்த்தப்படும்.
எமது மக்கள் செய்த பாவம், உங்களுக்கு வாக்களித்தது எனில், அந்தத் தவறையும் இனி எமது மக்கள் செய்ய மாட்டார்கள் என்பதையும் எமது மக்கள் சார்பாகத் தெரிவித்து,
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரமான 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து எமது மக்களுக்கான அரசியல் பிரச்சினைக்கான தீரிவினை அரம்பித்து, அதனை முன்னெடுத்துச் செல்வோம் என்பதை மீண்டும் வலியுறுத்தி இதைவிட மேலும் மார்க்கம் உள்ள அரசியல் தீர்வு எதுவும் இந்தக் காலக்கட்டத்தில் சாத்தியமில்லை என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
|
|
|


