இலகு வீடுகளை கேட்போருக்கு அதைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் உதவவேண்டும் – டக்ளஸ் தேவான்ந்தா பா.உ வேண்டுகோள்.

Friday, June 16th, 2017

தகரக் கொட்டில்களிலும், தரப்பாளின் கீழும், ஓலைக் குடிசைகளிலும் பல ஆண்டுகளாக கஸ்ட்டபடும் மக்களுக்கு இலகு வீடுகளையாவது பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு உதவுங்கள். புயலுக்கு சாயுமா? சுனாமிக்கு தாக்குப் பிடிக்குமா? உப்புக்காற்றில் துரப்பிடிக்குமா? காற்றோட்டம் இருக்குமா? வெப்பம் அதிகமாக இருக்குமா? என்றெல்லாம் ஆராய்வது தவறில்லை. ஆனால் கல்வீடுகளாக இருந்தாலும் இயற்கை அனர்த்தத்திற்கும், பாரிய அபாயங்களுக்கும் ஈடுகொடுக்க முடியாது என்பதை நாம் தெரிந்திருக்கின்றோம். தற்போதைய நிலையில் கல்வீடுகள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால் கைவசமிருக்கும் இலகு வீடுகளையாவது பெற்றுத் தாருங்கள் என்று கேட்கும் மக்களுக்கு அதைப் பெற்றுக்கொடுத்து உதவுங்கள் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் கொழும்பில் நேற்றையதினம் (15) நடைபெற்ற மீள்குடியேற்ற அமைச்சின் முன்னேற்ற அறிக்கை மீள்பார்வைக் கூட்டத்தில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கூறியவாறு உரையாற்றினார். தொடர்ந்தும் உரையாற்றும்போது,

இலகு வீடுகளை மக்களுக்கு வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. இவ்விடயத்தில் அரசியல் நோக்கமும் இருக்க முடியாது. நீண்டகாலமாக எவ்வித வீட்டுத் திட்டங்களும் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்கும்,இலகு வீடுகளையாவது பெற்றுத்தாருங்கள் என்று கோரிக்கைவிடுக்கும் மக்களுக்கும் இந்த வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்த இலகு வீடுகளைப் பற்றிய பல்வேறு அபிப்பிராயங்கள் சில தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அந்த அபிப்பிராயங்கள் மக்களிடையே அநாவசியமான குழப்பங்களை ஏற்படுத்தவே கூறப்படுவதாக நான் அறிகின்றேன். எனவே மக்கள் இந்த வீடுகளைப் பார்க்க வேண்டும். அது பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் எனவே இனியும் காலம் தாமதிக்காமல், வடக்கு கிழக்கின் ஒவ்வொரு பிரதேச செயலளார் பிரிவுகளிலும் மாதிரி வீடுகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் சுவாமிநாதன் அவர்களுக்கும் விடுகள் தேவையான மக்களின் சார்பாக அந்த வேண்டகோளை விடுக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

Related posts: