கடந்த நல்லாட்சி என்ற பெயரில் இங்கு நடந்தது போன்று இனி நடக்க நான் இடம் கொடுக்க மாட்டேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, October 31st, 2023


~~~

அரசாங்க வேலை வாய்ப்புக்களின் போது அந்தந்த பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பாக பிரதமருடனும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்தார்.

அதேநேரம், தென்னலங்கையை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வடக்கு மாகாணத்தில் நியமனம் வழங்கப்படுவது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,

அவ்வாறு நியமனங்கள் வழங்கப்படுமாக இருந்தால், தங்குமிடம் வாழ்கை செலவு மற்றும் மொழிப் பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவருவதால் அவர்களை சொந்த மாகாணத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ இடமாற்றம் செய்வதே சரியான நடவடிக்கையாக இருக்கும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பல அரசாங்க நிறுவனங்களில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் கீழ் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் –
குறித்த விடயம் தொடர்பில் பிரதமரோடு கலந்துரையாடி இருந்தேன். வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மையானவர்கள் தமிழ் பேசுகின்ற மக்கள். தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற போது தமிழ் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்திருக்கின்றன. அது உடனடியாக களையப்பட வேண்டும் என்று சொல்லி இருந்தேன் இதற்கு முன்னர் அமைச்சரவையிலும் அவரோடு கலந்துரையாடி இருக்கின்றேன்.
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் தென்னிலங்கையில் இருந்து நியமிக்கப்பட்டு இங்கு வருவதாக அறிந்து அதனை உடனடியாக நிறுத்துமாறும், இங்கிருக்கின்றவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சொல்லிய போது அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.

இது ஒரு அறியாமையில் செய்யப்பட்ட விடயமா அல்லது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விடயமா என்பது தெரியவில்லை. என்னை பொறுத்தவரையில் நான் இதற்கு இடம் கொடுக்க மாட்டேன்.
கடந்த காலத்தில் நல்லாட்சி என்ற பெயரில் இங்கு நடந்தது போன்று நான் இங்கு நடக்கவிடமாட்டேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: