எமது மக்களுக்கான நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் – பருத்தித் துறையில் டக்ளஸ் எம்.பி.
Monday, September 25th, 2017எமது மக்களின் நாளாந்த பிரச்சினைகள் மட்டுமன்றி அரசியல் உரிமை வரையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வினை நிச்சயம் பெற்றுத்தருவேன். அதற்கு வர இருக்கின்ற சர்தர்ப்பங்களை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தி எமக்கு அரசியல் பலத்தை உறுதிசெய்யவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக பொதுச்சபை கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களைப்போன்று எதிர்காலங்களிலும் உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் உசுப்பேற்றுதல்களுக்கும் இடங்கொடுக்காது உண்மையானதும் நியாயமானதுமான கருத்தக்களுக்கு செவிகொடுத்து மக்களுக்கு பணிசெய்யும் அரசியல் தலைமைகளை தெரிவுசெய்யவேண்டும்.
எமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காகவும் சரியான முறையில் நாம் முன்னெடுத்திருக்கின்றோம்.
எம்மால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலன் சார் பணிகளையோ அபிவிருத்தி சார் வேலைத்திட்டங்களையோ எதிர்காலங்களில்கூட எந்த தமிழ் அரசியல்வாதிகளாலும் எந்தத் தமிழ்க் கட்சிகளாலும் முன்னெடுக்கமுடியாது என்பதையும் திட்டவட்டமாக கூறவிரும்புகின்றேன் என தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தவதில் ஆரம்பித்து அதனைக் கட்டம் கட்டமாக முன்னெடுக்கவேண்டும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே இனங்களுக்கிடையே புரிந்துணர்வையும் நல்லுறவையும் வளர்த்தெடுக்கமுடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் வடமராட்சி மற்றும் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் இரட்ணகுமார் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.
Related posts:
|
|