உண்மைகள் உறங்கலாம்! மரணிப்பதில்லை!! – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, June 21st, 2016

அழிவு யுத்தம் வகைதொகை இல்லாமல் எமது மக்களை பலியெடுத்தபோது அதை பாதாம் பருப்பு சாப்பிட்டபடி தொலைக்காட்சியில் பார்த்து வீர வியாக்கியானம் பேசிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று யுத்தக்குற்றம் நடைபெற்றது என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டது என்றும் பொய்யாகப் புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள்

வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமும், ஜெனிவாவுக்குச் சென்றும் இதே பல்லவியை பாடிக் கொண்டிருக்கின்றார்கள். கோட்டுச் சூட்டுக்களுடன் வெளிநாட்டுப் பிரதிநதிகளுடன் கை குலுக்கியபடி புகைப்படம் பிடித்து பத்திரிகைகளுக்கு அனுப்பி அதை முன்பக்கத்தில் பிரசுரிக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்.

யுத்தம் எமது மக்களை கொன்றொழிக்கப் போகின்றது என்பதை நன்கு தெரிந்திருந்த இதே கூட்டமைப்பினர் யுத்தத்தை தடுத்து நிறுத்துமாறும், மனித அழிவுகளை தடுக்குமாறும் சர்வதேச பிரதிநிதிகளைச் சந்தித்து கை குலுக்கி கோரிக்கை விடுக்கவுமில்லை. ஜெனிவாவுக்குச் சென்று மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்துப் பேசவில்லை.அன்று ஊடகங்களுக்கு முகத்தைக் காட்டாமல் வெளிநாடுகளில் பதுங்கிக் கிடந்தார்கள்  என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார். 

அவரது பதிவில் மேலும் –

தாயகப் பகுதியில் தமிழ் மக்கள் துயரங்களைச் சுமந்து அழுத கண்களோடு நின்றபோது கூட்டமைப்பினர் தமது குடும்பங்களை பாதுகாப்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழ வைத்தார்கள்.உறவுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்தார்கள். இன்னும் சிலரோ தாங்கள் தமிழர்களே இல்லை என்ற தோரணையில் கொழும்பில் தமது வழக்கறிஞர் பதவிக்குரிய கருப்பு அங்கிகளால் முழுவதுமாக தம்மைப் போர்த்திக்கொண்டு தொழில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

புலிகளும் அழிந்து, தமிழ் மக்களும் அழிந்தபிறகு தமது கருப்பு போர்வைகளை கழற்றிவிட்டு குறுக்கு வழியில் கூட்டுக்குள் நுழைந்து இன்று சாணக்கிய அரசியல் பேசி தம்மை தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் என்று சத்தியம் செய்கின்றார்கள்.

சிங்கள எதிர்ப்பையும், தமிழ்த் தேசிய உணர்ச்சியையும் அழகாகப் பேசி தமது பதவிக்கான அரசியல் பாதையை பாதுகாக்க நினைப்பவர்களின் பொய்ச் சத்தியங்கள் துரதிஷ்டவசமாக தமிழ் மக்களிடையே இன்று சாத்தியமாகியிருக்கின்றது.

உண்மைகள் தற்காலிகமாக உறங்கிப்போகலாம். ஆனால் ஒரு நாளும் உண்மைகள் இறந்துபோவதில்லை.

நான் இதுவரை தமிழ் மக்களுக்கு கூறிய போதனைகளும், காட்டி பாதையும் தீர்க்க தரிசனமானதைப்போல், உறங்கிக் கிடக்கும் உண்மைகளும் விரைவில் விழித்துக் கொள்ளும் அப்போது சாணக்கியம் பேசும் சாக்கடை அரசியல் தலைமைகளை உண்மையான தமிழ்த் தேசியம் உமிழ்ந்து துப்பும்.

‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’

‘தர்மம் ஈற்றில் வெல்லும்’ என பதிவிட்டுள்ளார்.

 DDD

Related posts:

சூளைமேட்டுச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை தெளிவுபடுத்தினார்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த...
மக்களின் பலமானஆணை கிடைத்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் - செய்வதைத்தான் சொல்வேன் – அமைச்சர் டக...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான துறைசார் தரப்பினருடன்...