இளைஞர் யுவதிகளின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான அடித்தளத்தை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, May 2nd, 2019

எமது இளைஞர் யுவதிகளின் எதிர்கால அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான சூழ்நிலையையும் அதற்கான அடித்தளத்தை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான வியூகங்களை கடந்தகாலத்தில் நாம் உருவாக்கியிருந்த போதும் அதை முழுமையாக சாதித்துக்காட்ட வேண்டும் என்பதற்காகவே நாம் தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குருநகர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விகற்கும் HNDA மாணவர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது தொழில்வாய்ப்பு மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது இளம் சந்ததியினருக்கு ஒர் ஆக்கபூர்வமான நிலையை உருவாக்கிக்கொடுக்க இன்றுவரை தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தை தம்மிடம் வைத்துள்ள சுய நோக்கம்கொண்ட தமிழ் அரசியல் தலைமைகள் முயற்சித்ததும் கிடையாது இனியும் முயற்சிக்கப் போவதும் கிடையாது.

எமது மக்கள் கடும் யுத்த்திற்கு முகங்கொடுத்து பல அழிவுகளை சந்தித்திருந்தும் தமது கற்றல் முயற்சிகளை கைவிட்டது கிடையாது.  அத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மாணவர்களுக்காக பல நலத்திட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்ததுடன் தடுக்கப்பட்ட பல உரிமைகளையும் பெற்றுக் கொடுத்திருந்திருக்கின்றோம்.

அத்துடன் பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு மட்டுமல்லாது குறிப்பாக கல்வித்தரம் குறைந்தளவாக காணப்பட்ட பல ஆயிரம் இளைஞர் யுவாதிகளுக்கும் அவர்களது தகைமைக்கு ஏற்ப தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்து அவர்களுக்கும் சிறந்த  வாழ்க்கையினை உருவாக்கிக் கொடுத்திருந்தோம். இவற்றை எல்லாம் மக்கள் எமக்கு வழங்கிய ஒரு சிறு அரசியல் அதிகாரத்தை மட்டும் கொண்டே நாம் சாதித்துக் காட்டியிருந்தோம்.

ஆனால் இன்றுவரை தமிழ் மக்களின் அதிகளவான வாக்குப்பலத்தை தம்வசப்படுத்திக் கொண்டுள்ள இதர தமிழ் தரப்பினர் அவ்வாறான ஒரு சூழ்நிலையை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது கிடையாது.

வடக்கின் பல ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுந்திருக்கக் கூடிய அதிகாரம் மிக்க வடக்கு மாகாணசபையை கடந்த 5 வருடங்களாக வைத்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமது இளம் தலைமுறையினரை ஏமாற்றிவிட்டனர் என்பதுடன் அவர்கள் மாகாணசபையை ஊழல் புரியும் தளமாகவே பயன்படுத்தியிருந்தனர் என்பதையும் தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர்.

எனவே தமிழ் மக்கள் தமது அரசியல் அதிகாரத்தை எமது கரங்களுக்கு முழுமையாக தருகின்ற சந்தர்ப்பத்தில் நிச்சயமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாது அவர்களது அரசியல் அபிலாஷைகளுக்கும் நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க எம்மால் முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: