இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் கேள்வி!

Wednesday, May 9th, 2018

இரணைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்துள்ள 435 குடும்பங்களையும் அப்பகுதியில் மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  என்பதுடன் இப்பகுதியில்; தற்போது தங்கியுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மருத்துவ மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற  கேள்வி நேரத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக பூர்வீகமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் அமைந்துள்ள இரணைத்தீவில் வாழ்ந்திருந்த மக்கள் யுத்தம் காரணமாக கடந்த 1992 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தபோது சுமார் 230 குடும்பங்களைக் கொண்டிருந்தனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்திருந்த இம் மக்கள், முள்ளிவாய்க்கால் வரை சென்று, பின்னர் வவுனியா செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டு, தங்களது சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப்படுவதற்கு பதிலாக இரணைமாதா நகர், மன்னார் ஓடத்தொடுவாய், நாச்சிக்குடா ஆகிய பகுதிகளில் குடியேற்றப்பட்டிருந்த  நிலையில், குறித்த மக்களது வாழ்வாதாரத் தொழிலான கடற்றொழில் முயற்சிகளில் சுதந்திரமாக ஈடுபட இயலாத நிலையில், பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வந்திருந்தனர்.

இதன் பின்னர், இம் மக்கள் இரணைத்தீவுக்குச் சென்று கடற்றொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், இம் மக்கள் அங்கு மீளக்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தங்களது தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கும், தங்களது கால்நடைகளை வளர்ப்பதற்கும் தாங்கள் தங்கியிருந்து செயற்படுவதற்கு தங்களை இரணைத்தீவில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தற்போது சுமார் 435 குடும்பங்களைக் கொண்டிருக்கின்ற இம் மக்கள், தமிழ் அரசியல்வாதிகள்மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில், தாமாக முன்வந்து மேற்படி தீவில் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 400 பேர் வரையிலானவர்கள் தங்கியிருந்து வருகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு உட்பட அனைத்து தீவுப் பகுதிகளிலும் பாதுகாப்பு கடமைகளில் கடற்படையினர் நிலை கொண்டுள்ள நிலையிலும் மக்கள் அங்கு மீளக்குடியமர்த்தப்பட்டு, தங்களது தொழிற்துறைகளை மேற்கொண்டு, பொது வாழ்க்கையில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்ற நிலையில்; மனிதாபிமான  ரீதியிலும், இம்மக்களது அடிப்படை உரிமைகள் ரீதியிலும் சிந்தித்து அதற்கான தீர்வு வழங்கப்படவேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் -  டக்ளஸ் தேவானந...
சுகாதார வசதிகளை மேம்படுத்த கடற்றொழிலாளர்களுக்கு காசோலைகள் - அமைச்சர் டக்ளஸினால் வழங்கி வைப்பு!
பகிரங்க விவாதத்துக்குப் அச்சமின்றி வாருங்கள் - தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுத்துள்ளார் அ...

எதிர்வரும் 17 ஆம் திகதி மயிலிட்டி மீ்ன் பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு பணிகள் முன்ன...
குறுகிய நோக்கங்களுக்காக வன்முறைகள் ஊடாக தமது எதிர்பார்ப்பை நிறைவேற்ற எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாத...
சீசல்ஸ்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர் விவகாரம் - அமைச்சர் டக்ளஸ் - சீசல்ஸ் நாட்டிலுள்...