இந்திய மக்கள் தற்போது உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!
Sunday, May 29th, 2022இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தொப்புள் கொடி உறவுகளான இந்திய மக்கள் நீண்ட காலமாக உதவி வந்திருக்கிறார்கள். இடையில் ஏற்பட்ட துன்பகரமாக சம்பவம் ஒன்று எமக்கிடையிலான உறவில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த எதேச்சதிகார செயற்பாடு தொடர்பாக இந்திய மக்கள் தற்போது உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், வடக்கு மக்களுக்கு தேவையான பொருட்களை நேரடியாக இந்தியாவில் இருந்து காங்கேசன்துறைக்கு எடுத்து வருவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தமையை சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணையை தீவக மக்களுக்கு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
இதனிடையே அன்புடனும் அக்கறையுடனும் இந்தியாவினால் வடக்குமாகாண மக்களுக்கான அட்சயபாத்திர உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின்’ ஊடாக நெடுந்தீவு மற்றும் நயினாதீவு பிரதேசங்களை சேர்ந்த மக்களுக்கு மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு குறிக்கட்டுவானில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மற்றும் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் மற்றும் வேலனை பிரதேச செயலர் சிவகரன் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி மற்றும் பிரதேச உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தவிசாளர்கள் கலந்து கொண்டனர்.
000
Related posts:
|
|