அரசு கூறும் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை! –  டக்ளஸ் தேவானந்தா

Wednesday, August 24th, 2016

தற்காலச் சூழலில் நுகர்வோர் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அண்மையில் அத்தியாவசிய பொருட்களுக்கென சுமார் 16 பொருட்களுக்கான விலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அரச தரப்பில் கூறப்பட்டும், குறிப்பிட்ட அந்த விலைக்கு நுகர்வோரால் அப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையே தொடர்ந்தும் காணப்படுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வர்த்தகப் பண்டங்களுக்கான வரி தொடர்பான பிரேரணை இரண்டாம் நிலை வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதனையொட்டி கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், பொருட்களின் விலைகள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் குறிப்பிட்ட ஒரு விலையில் விற்கப்படுகின்ற அதே நேரம் வடக்கு, கிழக்கு, தெற்கு உட்பட்ட தூரப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு இதே விலைகளில் அப் பொருட்களை கொள்வனவு செய்ய இயலாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது. இந்த நிலையினை மாற்றியமைக்க தேசிய ரீதியில் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.

வெட் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் நாடளாவிய ரீதியில் கடைகள் மூடப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த ஒரு சில வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்கள் திட்டமிட்ட வகையில் சீல் வைக்கப்படுவதாகவும், இவர்கள் பழிவாங்கப்படுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

தேசிய உற்பத்திகள் சந்தைக்கு வரும் காலகட்டத்தில் அதே பொருட்களை  இறக்குமதி செய்யும்போது அதன் இறக்குமதி வரியை அதிகரிப்பதுடன், சில பொருட்களின் இறக்குமதியை அக் காலகட்டத்தில் குறைக்க அல்லது நிறுத்தவும் வேண்டியுள்ளது. இல்லையேல், தேசிய உற்பத்திகளை எம்மால்  கட்டியெழுப்ப முடியாது.

தேசிய ஒளடத சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளபோதிலும், மருந்து வகைகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளன. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சவுதியில் நிர்க்கதி நிலையிலுள்ள பெண் தொழிலாளர்களது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு –  டக்ளஸ் எம்.பி நட...
அரசியல் பயம் கொண்டவர்களினாலேயே அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது: இளைஞர் மாநாட்டில் அமைச்சர் டக...
வடக்கில் விவசாயத் துறையையும் நீரியல் வள செய்கையினையும் ஒரே நேரத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் முன்ன...