அரசாங்கத்தின் சமிக்ஞைகளை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
Friday, October 30th, 2020தமிழ் மக்களையும் பங்காளிகளாக இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் விரும்புவதன் வெளிப்பாடே தனக்கு வழங்கப்படுகின்ற நியமனங்கள் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த சமிக்ஞைகளை புரிந்து கொண்டு தமிழ் மக்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனக்கு வழங்கப்படுகின்ற நியமனங்கள் மற்றும் பொறுப்புக்கள் போன்றன தமிழ் மக்கள் சார்பாகவே வழங்கப்படுகின்றன. தற்போதைய அரசாங்கம் தென்னிலங்கை மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற நிலையிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் இவ்வாறான சமிக்கைகளை தமிழ் மக்கள் புத்திசாதுரியமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.
சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும்.
சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் குறித்த நாடாளுமன்ற பேரவையில் அங்கம் வகிப்பார்கள்.
அதனடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
19 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக தற்போது நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|