அமைச்சர் டக்ளஸின் தலையீட்டினால் உப்பின் விலை குறைவடைந்தது!

Friday, October 30th, 2020


கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டினை தொடர்ந்து மாந்தை உப்பு நிறுவனம் உப்பின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் நாளையிலிருந்து(30.10.2020) ஐம்பது கிலோ கிராம் உப்பு மூட்டையினை 750 ரூபாய்க்கு பொது மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

மாந்தை உப்பு நிறுவனத்தினால் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல் கடந்த 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட நிலையில், குறித்த விடயம் தொடர்பாகவும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவுடன் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதுவரை காலமும் 50 கிலோகிராம் உப்பு மூட்டை 675 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது மாந்தை மாந்தை உப்பு நிறுவனத்தினால் 950 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமையை தெரியப்படுத்தியதுன், மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக, கடலுணவு விளைச்சல் தற்போதைய மாத காலப் பகுதியில் அதிகளவில் காணப்படுகின்ற நிலையில், கொவிட் – 19 காரணமாக அவற்றை ஏற்றுமதி செய்யவோ விற்பனை செய்யவோ முடியாத சூழல் காணப்படுகின்றது.

இதனால், கடற்றொழிலாளர்கள் கருவாட்டு உற்பத்தியை முடியுமான அளவு அதிகரிக்குமாறு கடற்றொழில் அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கருவாடு பதனிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற உப்பின் விலை அதிகரிப்பானது பல்வேறு தளங்களில் தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச, சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி உப்பின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தார்.

அதற்கமைய ஒரு கிலோகிராம் உப்பை 15 ரூபாய் விகிதம் விற்பனை செய்வதற்கு மாந்தை உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: