அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் இருப்பின் ஆராய்ந்து தீர்வு காணப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, December 21st, 2023

அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் இருப்பின் அது தொடர்பாக ஆராய்ந்து தீர்வு காணப்படும்  என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரச சுற்றுநிருபங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற நியமனங்களில் தலையிடுவது, மக்களுக்கு செய்கின்ற அநீதியாக அமைந்து விடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, வடக்கு மாகாணத்தில் புதிதாக அதிபர் நியமனம் பெற்றுக் கொண்டவர்களுள் ஒரு பகுதியினர் இன்று (21.12.2023) சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் – புதிதாக அதிபர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர் வெளி மாவட்டங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு நியமிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே ஆசிரியர்களாக வெளி மாவட்டங்களில் கடமையாற்றி இருப்பது உட்பட பல்வேறு காரணங்களை முன்வைப்பதுடன், தம்மை சொந்த மாவட்டங்களில் கடமையாற்ற சந்தர்ப்பம் அளிக்குமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

குறித்த கோரிக்கைகள் தொடர்பாக, சம்மந்தப்பட்ட அதிபர்களின் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் கேட்டறிந்த அமைச்சர்,  சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு,  குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்ததுடன்,  நியமனங்கள் அனைத்தும் நியாயமானதாகவும் சுற்றுநிருபங்களுக்கு அமைவானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மேலும், மனிதாபிமான காரணங்களையும் பரிசீலிக்குமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? - அமைச்ச...
ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண விசேட மாநாடு திருமலையில்: செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆர...
மண்டைதீவில் அமையவுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!