அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு – யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்!

Thursday, March 28th, 2024

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கின் ஆளுநரும் மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான திருமதி சார்ள்ஸின் பிரசன்னத்துடன் இன்றையதினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன.

யாழ் மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனின் ஒழுங்குபடுத்தலில் ஆரம்பமான மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஊடக மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பிலும் அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டன

இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரன் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் கே.வி.சிவஞ்ஞானம், பாதுகாப்பு துறைசார் அதிகாரிகள், பிரதேச செயலக பதவிநிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.

கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன.

சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும்  ஆளுநர் தெரிவித்தார்.

இந்நிலையில் மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்…

இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதி பணிப்பாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது..

அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பற்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு  அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன் யுக்திய விசேட சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பொலிசாருக்கு  அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மின் கட்டணப் பட்டியல நீண்ட காலமாகக் கிடைத்திராத மக்களது பாக்கித் தொகைகளை மீளச் செலுத்துவதற்கு கால அவ...
அனுமதியளிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலை எவரும் தடுக்கமுடியாது : விரைவில் உரிய நடவடிக்கை - செயலாளர் நாயக...
புறக்கணிக்கப்பட்ட மோதரை மீனவர்களுக்கு 7 மில்லியன் நிதியுதவி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்த...