பொதுத்தேர்தல் இல்லாமல் தெரசா மே பிரதமராக தொடர அதிக மக்கள் ஆதரவு!

Monday, July 18th, 2016

பிரித்தானியாவில் தெரசா மே பொதுத் தேர்தல் இல்லாமல் பிரதமராக தொடர 46 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 38 சதவீதமானோர் எதிராக வாக்களித்துள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று கடந்த சனிக்கிழமை நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில் இத்தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக மீண்டும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு பெரும்பாலான பிரிட்டன் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பாக கடந்த ஜூன் 23-ம் தேதி லண்டன் நகரில் பிரிக்ஸிட் எனப்படும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 52 சதவீதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். 48 சதவீதம் பேர் விலக வேண்டாம் என்று கூறி வாக்களித்தனர்.

இதனிடையே, ஐரோப்பிய யூனியனில் நீடிப்பது தொடர்பாக மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ஆன் லைன் மனுவில் 40 லட்சம் மக்கள் வலியுறுத்தி இருந்தனர். மீண்டும் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று கடந்த சனிக்கிழமை கருத்துக் கணிப்பு ஒன்றினை நடத்தியது.

அதில் 57 சதவீதம் மக்கள் இரண்டாவது வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 29 சதவீதம் பேர் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். தெரசா மே பொதுத் தேர்தல் இல்லாமல் பிரதமராக தொடர 46 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 38 சதவீதம் பேர் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Related posts: