வித்தியா கொலை வழக்கு: பொய்யான  தகவல்களை வெளியிட்ட குற்றப்புலனாய்வு அதிகாரியைக் கடுமையாக எச்சரித்த நீதவான்

Tuesday, April 26th, 2016

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் தாம் ஒருவரைக்  கைது செய்ய உத்தரவிட்டதாக பொய்யான தகவலை வெளியிட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரியிடம் ஊர்காவல்துறை நீதவான் எம்.றியால் இன்று கேள்வியெழுப்பியதுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டமை தொடர்பிலும் குறித்த அதிகாரியை நீதவான் மிகவும்  கடுமையாக எச்சரித்துள்ளார். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு நேற்று திங்கட்கிழமை (25-04-2016)  மீண்டும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தக்  கொலை வழக்கில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கில் நேரில் கண்ட சாட்சியம் மற்றும் குற்றச்சாட்டோடு தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 11ஆம், 12ஆம் சந்தேக நபர்கள் மீதான வழக்கு விசாரணை  கடந்த 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது நீதவான் குறித்த வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவர் முன்னர் தப்பிச் சென்றமை தொடர்பில் விசாரணைகளை  மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுப்  பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் குற்றப்புலனாய்வு அதிகாரி இந்த  வழக்குத்  தொடர்பில் குறித்த நபரின் பெயரைக்  குறிப்பிட்டு அவரை கைது செய்ய நீதவான் உத்தரவிட்டிருப்பதாகச்  சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது தாம் அவ்வாறு தெரிவித்திருந்தேனா ? எனக்  குற்றப்புலனாய்வு அதிகாரியிடம் நீதவான் கேள்வியெழுப்பினார் . அத்துடன் நீதிமன்றச்  செயற்பாடுகள் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிடக் கூடாது எனவும் நீதிவான் இதன் போது அறிவுறுத்தினார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரின் மனைவியுடன் குற்றப்புலனாய்வு அதிகாரி பேசியிருந்தமை தொடர்பிலும் நீதவான் அவரிடம் வினாவினார். குற்றப்புலனாய்வு அதிகாரியுடைய இத்தகைய செயற்பாடு தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கையினுடாக விளக்கம் கோருவேன் எனவும் நீதிவான் தெரிவித்தார்.

இன்றைய தினமும் மரபணு விசாரணை அறிக்கை சமர்பிக்கப்படாத நிலையில் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம்- 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை  பத்துச் சந்தேகநபர்களுக்குமான விளக்கமறியலை  நீடித்து நீதவான் உத்தரவிட்டார்

Related posts: