போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் வழங்கப்படவேண்டும் கிளி.மாவட்ட அரசாங்க அதிபர் அருமைநாயகம்
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/06/images-2-2.jpg)
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் விரைவில் வழங்கப்படவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்
தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்துவதற்கான செயற்பாட்டு நிலையம் ஒன்றினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மீள்குடியேற்றப் பிரதேசங்களில் வீதி அபிவிருத்திகள், திணைக்களக் கட்டடங்கள், உட்கட்டுமான வசதிகள் போன்ற அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். இத்தகைய அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் சமூகத்தில் அபிவிருத்தி முன்னெடுப்பில் பாரிய இடைவெளி காணப்படுகின்றது
இந்த நிலையில் தற்போது நல்ல ஓர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதாவது உளவளத்துறை சமூக மேம்பாடுகள் தொடர்பாக உள்ளூரில் உள்ள வளவாளர்களை வளப்படுத்தி அவர்கள் மூலம் மக்களுக்கான உள ஆற்றுப்படுத்தல்களை மேற்கொள்வதாகும். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மன நிலைகளை ஓரளவு ஆற்றுப்படுத்தமுடியும் என்ற அடிப்படையிலேயே இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது எனத் தெரிவித்தார்
இந்நிகழ்வில் உளவளத்துறை நிலையத்தைச் சேர்ந்த வைத்தியர் தர்சன் பெரேரா, கரைச்சி, கண்டாவளை, பூநகரி பச்சிலைப்பள்ளி, ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் பெண்கள் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர், கிளிநொச்சி மாவட்ட உதவிப்பிரதேச செயலாளர் ரீ.பிருந்தாகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|