சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி : விலகினார் முரளிதரன்!

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து முத்தையா முரளிதரன் விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்காரா அவருக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக பல ஆண்டு காலம் விளையாடி வந்த முத்தையா முரளிதரன், தற்போது அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு அறிவுரையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது கண்டியில் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றது. போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக பெலாகலே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு முரளிதரன் பயிற்சி அளிக்க சென்றுள்ளார். அப்போது மைதான பராமரிப்பாளருடன் முரளிதரனுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் மேலாளர் சேனநாயகவுடன் முரளிதரன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு இமெயில் வழியாக புகார் அளித்திருந்தது. அதில், ” இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதி பாலா, ”இங்கே இரு பிரச்னைகள் நடந்துள்ளன. இலங்கை அணியின் மேலாளர் சேனாநாயகா, முரளிதரனால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சேனநாயகா எனக்கு புகார் அளித்துள்ளார். எந்த முன் அனுமதியும் இல்லாமல் மைதானத்திற்கு ஆஸ்திரேலிய அணி வீரர்களை பயிற்சிக்காக முரளிதரன் அழைத்துச் சென்றுள்ளார். இது இரண்டாவது பிரச்னை ‘ என அந்த புகாரில் கூறியிருந்தார்.
ஆனால் முரளிதரனோ, ”ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதால் தன்னை துரோகி போல நடந்துவதாகவும் எனது திறமையைப் பயன்படுத்திக் கொள்ள இலங்கை முன்வரவில்லை. என்னை மதிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன்” என பதிலடி கொடுத்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து புகார் கடிதம் கிடைத்ததாகவும் ஆனால் பிரச்னை சமதானமாக முடித்து வைக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து முத்தையா முரளிரதரன் விலகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
”கண்டி சம்பவம் காரணமாக முரளிதரனுடன் ஆஸ்திரேலிய அணி மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இனிமேல் முரளிதரன் ஆஸ்திரேலிய அணியின் டிரெஸ்சிங் அறைக்கு வரமாட்டார்” என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், முரளிதரனுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் கண்டி மைதான சம்பவம் காரணமாக முடிவுக்கு வந்துள்ளது எனவும், இந்த தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஒப்புக் கொண்டுள்ளது” என்று செய்திகள் கூறுகின்றன..
மூன்று டெஸ்ட் 5 ஒருநாள், 2 டி20 போட்டிகள் கொண்ட இந்த ஒரு தொடருக்காக மட்டும்தான் ஆஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு அறிவுரையாளராகச் செயல்பட முரளிதரனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கையால், ஒரு போட்டிக்கு கூட அவரால் பயிற்சி அளிக்க முடியாமல் போய் விட்டது.
இதற்கிடையே இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்காரா, முரளிதரனுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”முரளிதரன் இலங்கை மண்ணின் மைந்தன். அவர் இந்த நாட்டை நேசிக்கிறார். எந்த அணிக்கு பயிற்சியாளராகவோ அல்லது அறிவுரையாளராகவோ அவர் செயல்படலாம். இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டால், இலங்கை அணிக்கு கூட பயிற்சியாளராக இருப்பார். ஒரு வீரர் மற்ற அணிக்கு ஆலோசகராக செயல்பட்டால், கிரிக்கெட்டுக்குச் செய்யப்படும் சேவையாகக் கருத வேண்டுமே தவிர, தவறானகண்ணோட்டத்தில் பார்க்க கூடாது” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே ஐ.சி.சி. யின் வாழ்நாள் சாதனையாளர் பட்டியலில் முத்தையா முரளிதரன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.இலங்கை அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டியில் 534 விக்கெட்டுகளையும் 12 டி 20 போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும் முரளிதரன் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 22 முறை 10 விக்கெட்டுகளையும் 67 முறை 5 விக்கெட்டுகளையும் முரளிதரன் கைப்பற்றியுள்ளார். 1993ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக விளையாடி வந்தார். 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியிலும் இடம் பெற்றிருந்தார். உலகின் மிகச்சிறந்த ஓஃப் ஸ்பின்னராக வலம் வந்தவர் முரளிதரன் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|