சதொச விற்பனையகங்களில் பொருள் கொள்வனவுக்காக இருந்த நிபந்தனை இன்றுடன் அவசியமில்லை – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/11/download-1-6.jpg)
சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை இன்று 6 ஆம் திகதிமுதல் அமுலாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 04 ஆம் திகதிமுதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியனவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று வர்த்தக அமைச்சர் பந்துல அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, சதொசவில் அரிசி மற்றும் சீனி என்பவற்றை கொள்வனவு செய்வதாயின் மேலதிகமாக 5 பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அரிசி, சீனி, மஞ்சள் போன்ற பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது, அவற்றுடன் மேலும் 5 பொருட்களையேனும் கொள்வனவு செய்யாவிட்டால், அரிசி மற்றும் சீனியை மாத்திரம் விற்பனை செய்யும் கொள்கை பின்பற்றப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, இன்றுமுதல் குறித்த நடைமுறை பின்பற்றப்படமாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|