கடன்வசதி முறையின் கீழ் அரச வர்த்தகங்களுக்கான செயற்பாட்டு மூலதனத்தைப் பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, August 11th, 2021

கடன்வசதி முறையின் கீழ் அரச வர்த்தகங்களுக்கான செயற்பாட்டு மூலதனத்தைப் பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொரோனா தொற்று நிலைமையால் சந்தைப் பொறிமுறை சரியான வகையில் இடம்பெறாமையால் தற்போது இயங்கிவரும் அரசாங்கத்திற்குச் சொந்தமான 282 முழுமையான அல்லது பகுதியளவிலான வர்த்தக நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இதனால் குறித்த வர்த்தகங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான செயற்பாட்டு மூலதனத்தை வழங்குவதில் சிரமங்கள் தோன்றியுள்ளன.

2020 ஆம் ஆண்டு இறுதியில் நாடளாவிய ரீதியில் கொவிட் 19 தொற்று நிலைமை பரவியமையால் சிறிய மற்றும் நடுத்தரத் துறைகளுக்குத் தேவையான செயற்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் அரசாங்கம் ‘கொவிட் 19 இலிருந்து மீண்டெழும் சௌபாக்கிய வசதி’ எனும் பெயரிலான சலுகை அடிப்படையிலான கடன் வசதி முறையை நடைமுறைப்படுத்தியதுடன், குறித்த கடன்வசதி முறையின் கீழ் 53 ஆயிரத்து 200 தொழில் முயற்சியாளர்களுக்கு அண்ணளவாக 156 பில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயெ குறித்த கடன்வசதி முறையின் கீழ் அரச வர்த்தகங்களுக்கான செயற்பாட்டு மூலதனத்தைப் பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: