கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தால் நாம் மீண்டும் உலகக் கிண்ணத்தை வெற்றிக் கொள்ளலாம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, March 17th, 2021

கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தால் நாம் மீண்டும் உலகக் கிண்ணத்தை வெற்றிக் கொள்ளலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை, கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு 25 ஆண்டுகள் பூர்த்தி விழாவை முன்னிட்டு வீரர்களை கௌரவிக்கும் முகமாக அலரி மாளிகையில் இடம்பெற்ற உலகக் கிண்ண வெற்றியின் 25 ஆவது ஆண்டு தேசிய நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் அலுவலகம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த தேசிய நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்த வெற்றி இன்று நேற்று இடம்பெற்றது போன்று நினைவிலுள்ளது. இன்று எமது கிரிக்கெட் களத்தில் இடம்பெறுவதை நோக்கும் போது எமது இந்த வெற்றியை கிரிக்கெட் இரசிகர்கள் அடிக்கடி நினைவுபடுத்துகின்றனர் என்பதை நான் கூற  வேண்டும்.

நிகழ்காலத்தை சரிசெய்ய கடந்த காலம் முக்கியமானதாகும். அன்று அரங்கில் விளையாடியவர்கள் சாதாரண கிரிக்கெட் வீரர்கள் அல்லர். நாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உணர்வு கொண்ட இளைஞர்களாவர். அன்றைய எமது வெற்றியை ஆசிய நாடுகள் தாம் பெற்ற வெற்றியாகவே கருதின.

அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து ஆகிய நாடுகள் அன்று எமது நாட்டில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டியில் விளையாட முடியாது எனக் கூறின. இலங்கையில் அக்காலப்பகுதியில் காணப்பட்ட பயங்கரவாதம், கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களே இலங்கைக்கு வராதிருப்பதற்கான காரணங்களாக குறிப்பிட்டனர்.

எமது விமான நிலையங்கள் போன்றே எமது துறைமுகமும் உலகின் பாதுகாப்பற்ற இடங்களாக பல முறை பெயரிடப்பட்டது. அவ்வாறானதொரு நிலைமையில் நான் மேலே குறிப்பிட்ட நாடுகள் உலகக் கிண்ணத்தை வழங்கினாலும் இலங்கைக்கு வர முடியாது எனக் குறிப்பிட்டன.

கிரிக்கெட் சுற்றுலா அணிகள் இலங்கைக்கு வருவதாக இருப்பின் அவர்கள் வந்து தங்கும் அறைக்கு முன்னால் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற ரீதியில் நான் உறங்குகிறேன். நீங்கள் வருகைதந்து கிரிக்கெட் தொடரில் பங்குபெறுங்கள் என அப்போதைய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டமை எனக்கு நினைவிருக்கிறது. ஊடகங்களில் பகிரங்கமாக அவ்வாறு அறிவிக்கப்பட்ட போதிலும் இலங்கையில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறுவதற்கு அந்நாடுகள் விரும்பவில்லை.

இலங்கையை வெற்றி பெறச் செய்வதில் காணப்பட்ட விருப்பமின்மையே இங்கு வருகை தராமைக்கு காரணம் என அச்சந்தர்ப்பத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் உணர்ந்தன. அதன்போது இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் எமது நாட்டிற்கு சகோதரத்துவத்தின் கரங்களை நீட்டின. அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு எமக்கு ஊக்கமளித்தனர்.

நாம் உலகக் கிண்ணத்தை வென்ற போட்டி பாகிஸ்தானிலேயே இடம்பெற்றது. அச்சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் எமக்கு வழங்கிய உற்சாகத்திற்கமைய, அதனை அவர்கள் ஆசியாவின் வெற்றியாகவே நோக்கியுள்ளனர் என்பது எமக்கு புலப்படுகிறது. இலங்கையின் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு, பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஆரவாரம் செய்த நாள் அதுவாகும்.

அதுமாத்திரமன்றி முரளிதரன் போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை களத்திலிருந்து வெளியேற்ற பெரும் முயற்சி மேற்கொள்ளப்படையும் எனக்கு நினைவிருக்கிறது. இந்த வீரருக்கு எதிராக மிகவும் நியாயமற்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டன. எனினும், முரளிதரனை பாதுகாப்பதற்கு அப்போதைய தலைமைத்துவம் பெரும் சேவையாற்றியது. இவற்றின் காரணமாக, நமது கிரிக்கெட் வீரர்களின் ஒரு அணி என்ற உணர்வு வெகுவாக அதிகரித்தது. அந்த சம்பவம் முரளியை இன்று உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது என்று நான் நம்புகிறேன்.

இந்த உலகக் கிண்ணம் தொடர்பில் நான் கேள்விப்பட்ட ஒரு கதை எனக்கு நினைவிருக்கிறது.

1996 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான அரையிறுதிப் போட்டி இந்தியாவில் ஒரு அரங்கத்திலேயே நடைபெற்றது. போட்டியின் இறுதி நெருங்கும்போது இந்திய அணியின் இரசிகர்கள் கிளர்ந்தெழுந்து தொடர்ந்து கற்களையும் போத்தல்களையும் அரங்கிற்குள் வீச ஆரம்பித்தனர். அந்த காட்சியை முழு உலகமுமே பார்த்தது.

அந்நேரத்தில் அணியின் துணைத்தலைவர் அரவிந்த டி சில்வா, மைதானத்தின் எல்லைக்கு அருகே களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தார். அதன்போது மேலதிக வீரராக இருந்த உபுல் சந்தன, அரவிந்த டி சில்வாவிடம் சென்று நீங்கள் உள்ளே களத்தடுப்பில் ஈடுபடுங்கள், நான் எல்லையில் களத்தடுப்பில் ஈடுபடுகிறேன், கற்கள், போத்தல்களால் நீங்கள் தாக்கப்பட்டால் இறுதி போட்டியில் உங்களுக்கு விளையாட முடியாது போகும். அவ்வாறு இடம்பெறின் நாம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என கூறினாராம். தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கக் கூடிய அளவிற்கு நாட்டின் மீது மிகுந்த பற்றுகொண்ட அணியொன்று அப்போது காணப்பட்டது என்பதை நான் கூற வேண்டும். எனவே இது மனிதகுலத்தின் கதையாகும்.

உலகக் கிண்ணத்தை வென்று இந்த அணி இலங்கைக்கு விஜயம் செய்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. அன்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் ஜனாதிபதியாக செயற்ப்பட்ட எமது ஆட்சியே காணப்பட்டது. அர்ஜுன ரணதுங்கவின் தந்தை அரசாங்கத்தின் அமைச்சரொருவராக இருந்தார். எனினும் உலகக் கிண்ணத்தை தமிழீழ விடுதலை புலிகளின் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த காமினி திசாநாயக்க அவர்களின் இல்லத்திற்கே அர்ஜுன ரணதுங்க எடுத்துச் சென்றார்.

உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு காமினி திசாநாயக்க அவர்களின் காலப்பகுதியில் அடித்தளம் இடப்பட்டமையை கௌரவிக்கும் முகமாகவே அவ்வாறு செய்யப்பட்டது. எனவே இன்று நாம் கொண்டாடுவது ஒரு மனிதகுலத்தின் கதையாகும். அன்று கிரிக்கெட் விளையாடிய மிகச்சிறந்த வீரர்களின் கிரிக்கெட் போட்டிகள் இந்நாட்களில் இடம்பெறுகின்றன. அவர்கள் அடுத்தடுத்து வெற்றி பெறுவதும் விளங்குகிறது. அந்த வெற்றியில் இரகசியம் கிரிக்கெட் விளையாட்டில் உள்ள வசதிகளோ அல்லது பணமோ அல்ல. கடந்த காலத்தில் ஒழுக்கமாக விளையாடியதன் மூலம் பெற்ற பயிற்சியே ஆகும். கடந்த காலத்தில் வீரர்களிடையே காணப்பட்ட ஒற்றுமை உணர்வு. அதுவே உலகக் கிண்ணத்தை வெல்ல எங்களுக்கு உதவியது.

எமக்கு நிகழ்காலத்தை சிறப்பாக கட்டியெழுப்பவே கடந்த காலம் உள்ளது. இன்று எமக்கு கிரிக்கெட் விளையாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்ததொரு பாடமாக கடந்த காலமே உள்ளது. அந்த கடந்த காலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தால் இன்று நாமுள்ள துயர நிலையிலிருந்து விடுபட முடியும் என நான் நம்புகின்றேன். கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமை, மனிதநேயம் என்பவற்றை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தால் மீண்டும் அதேபோன்றதொரு வெற்றியை பெற முடியும் என நான் நம்புகின்றேன் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

Related posts: