ஒரே நாளில் உலகின் பலம்பொருந்திய பல நாடுகளின் இராஜதந்திரிகளுடன் சந்திப்பு – பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் ஆராயப்பட்டதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/07/214119510_251322473464554_6032235095808308360_n.jpg)
இலங்கையில் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, 7 நாடுகளின் வெளிநாட்டுத் தூதுவர்களையும், உயர்ஸ்தானிகர்களையும் நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்புகளின்போது நான்கு நாடுகளின் இராஜதந்திரிகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் இருவர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவை இன்று சந்தித்துள்ளனர்.
ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை பிரித்தானியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் நிதியமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ அதீத கவனம் செலுத்தியதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், மீள்புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை ஊக்குவிப்பதற்கு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பு வர்த்தகத்தினை மிகுந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இலங்கைக்கு எதிர்காலத்திலும் தடுப்பூசி வசதிகளை வழங்குவதாக சீன தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்மட்ட முதலீட்டாளர்களை ஹம்பாந்தோட்டை தொழில் பேட்டையில் தொடர்புபடுத்த தயாராகவுள்ளதாகவும் சீன தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அதேவேளை LNG வலு சக்தி செயற்றிட்டத்திற்காக முதலீட்டாளர்களை ஈடுபடுத்துவதற்கு இருக்கும் இயலுமை தொடர்பாக ஆராய்வதாக அமெரிக்க தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|