அனைத்து பாடசாலைகளதும் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம் – வாகனங்களுக்கு போக்குவரத்துச் சபை டிப்போக்களில் எரிபொருள் வழங்கவும் ஏற்பாடு!

Monday, June 6th, 2022

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று  ஆரம்பமாகின.

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றதனால் முதலாம் தவணையின் முதற்கட்டம் கடந்த மாதம் 19 ஆம் திகதி நிறைவடைந்தது.

இன்று ஆரம்பமாகும் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 8 ஆம் திகதி நிறைவடையும் அதேநேரம் இரண்டாம் தவணை அடுத்த மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான நாட்களே பாடசாலை நடைபெற்றது. இதனால் இந்த வருடம் டிசெம்பர் மாத நடுப்பகுதி வரை பாடசாலைகளை நடத்துவதற்கும் கல்வியமைச்சு எதிர்பார்த்துள்ளது.

இதனிடையே, கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் 26 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

106 மத்திய நிலையங்களில் விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 09 ஆம் திகதி வரை 25 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தப் பணிகளில் சுமார் 40,000 பரீட்சை மதிப்பீட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

இதனிடையே, 2021 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடுத்த மாத இறுதியில் வௌியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரயோக பரீட்சைகள் நடைபெற்ற பின்னர் பரீட்சை முடிவுகளை வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் L.M.D.தர்மசேன கூறியுள்ளார்.

இதற்கமைவாக, பொறியியல் தொழில்நுட்ப பாடநெறிக்கான பிரயோக பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி உயிரியல் தொழில்நுட்ப பாடநெறிக்கான பிரயோக பரீட்சையும் எதிர்வரும் 29 ஆம் திகதி மனைப் பொருளியல் பாடநெறிக்கான பிரயோக பரீட்சையும் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்களில் இருந்து பாடசாலை வாகனங்கள் மற்றும் பேருந்துகளுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts: