அச்சுவேலியில் தொலைபேசி விற்பனை நிலையம் தீக்கிரை!

அச்சுவேலி அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன் அருகிலிருந்த இரண்டு பலசரக்குக் கடைகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது..
தொலைபேசி விற்பனை நிலையத்தில் இருந்த 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களும், இரண்டு பலசரக்கு கடைகளில் இருந்த 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
மேற்படி தொலைபேசி விற்பனை நிலையத்தின் பின்பக்க கூரையில் தீ பரவத்தொடங்கியுள்ளது. இதனையடுத்து, கூரை ஓடுகள் கீழே வீழும் சத்தத்தைக் கேட்ட தனியார் வங்கியின் காவலாளி, இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், இராணுவத்தினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும், அலைபேசி விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. தொடர்ந்து, பலசரக்குக் கடைகளுக்கு பரவிய தீயை யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், தனிப்பட்ட விரோதம் காரணமாக தொலைபேசி நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். தடய அறிவியல் பொலிஸார் மூலம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படுகின்றது.
Related posts:
|
|