ஒலிம்பிக்: தடகளப் போட்டிகள் இன்று ஆரம்பம்!

31 ஆவது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5 ஆம் திகதி கோலாகலமாக தொடங்கியது.
இதில் 206 நாடுகளை சேர்ந்த 11,000 மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் அமெரிக்கா, சீனா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டு பதக்க வேட்டை நடத்தின. டென்னிஸ், பட்மிண்டன், குத்துச்சண்டை, கோல்ப் உள்ளிட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தடகள போட்டிகள் இன்று தொடங்குகிறது, ரியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் மொத்தம் 47 தங்கப்பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இதில் பெண்களுக்கு 23 பந்தயங்களும், ஆண்களுக்கு 24 பந்தயங்களும் அடங்கும், மின்னல்வேக வீரர் என்று அழைக்கப்படும் ஜமேக்காவின் உசேன்போல்ட்டின் ஓட்டத்தை காண ரசிகர்கள் தவமாய் தவம் கிடக்கிறார்கள்.
உலகின் அதிவேக வீரர் யார் என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்றுப் போட்டி நாளையும், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி நாளை மறுதினமும் அரங்கேறவுள்ளன. இலங்கை சார்பில் நிலூக ராஜசேகர மற்றும் சுமேதா ரணசிங்க ஆகியோர் தடகளப் போட்டிகளில் களமிறங்குகின்றனர்.
Related posts:
|
|