தமிழ்த் தேசிய இனத்தின் அனைத்து உரிமைகளுக்கும் தீர்வு காணும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள் –நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/06/kepapilavu.jpg)
தமிழ் தலைமைகள் விட்ட தவறுகளுக்காக சாதாரண தமிழ் பேசும் மக்கள் ஒரு போதும் தண்டிக்கப்படு விடக்கூடாது. நான் அடிக்கடி கூறுவதுபோல் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் வேறு. தமிழ் பேசும் மக்களின் பெயரால் சுயலாப அரசியல் நடத்தும் தமிழ் தலைமைகளின் பிரச்சினைகள் வேறு. அரசியல் தீர்வின்றி அவலப்படும் எமது மக்களின் சார்பாக நான் கேட்கிறேன். அன்று ஆயுதம் ஏந்திப் போராடி இன்று சமாதானப் புறாக்களைக் கைகளில் ஏந்தி வந்து நான் கேட்கிறேன்.
எமது மொழி! எமது வரலாற்று வாழ்விடம்! எமக்கென இருக்கும் பொருளாதாரம்! எமது மக்களின் கலை கலாசார பண்பாடுகள்! இவைகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் அனைத்து உரிமைகளுக்கும் தீர்வு காணும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
இனவாதமோ, மத வாதமோ அது எந்த உருவில் வந்தாலும் அதனை நாங்கள் எதிர்ப்பவர்கள். அதில் தமிழ் இனவாதம், சிங்கள் இனவாதம், முஸ்லிம் இனவாதம் என்றோ, இந்து மத வாதம், பௌத்த மத வாதம், இஸ்லாமிய மத வாதம் என்றோ பாகுபாடு எமக்கு கிடையாது. இனவாதத்தையோ, மதவாதத்தையோ மூலதனமாக்கி அரசியல் செய்ய வேண்டிய வங்குரோத்து நிலையில் எமது கட்சி இல்லை என்பதை நான் மீண்டும் இந்தச் சபையிலே வலியுறுத்திக் கூறுகின்றேன். முஸ்லிம் கடைகளைத் தவிர்க்க வேண்டும் என சிலர் ஊடகங்களில் பகிரங்கமாகவே கூறுகின்றனர். பதிலுக்கு முஸ்லிம் மக்களும் சிங்களக் கடைகளைத் தவிர்க்குமாறு ஊடகங்களில் கூறப் போனால், இந்த நாட்டின் எதிர்கால நிலை என்னவாகும்? என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்
Related posts:
|
|