இலவசமாக கிடைக்கின்ற கல்வியை எமது மணவர்கள் சரியாக பெற்று தங்களை மட்டுமல்லாது தமது சமூகத்தையும் உன்னதமான ஒரு நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும் – டக்ளஸ் எம். பி. தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/10/IMG_20181017_142337-1.jpg)
இலவசமாக கிடைக்கப்பெறுகின்ற கல்வியை எமது மணவர்கள் சரியாக பெற்றுக்கொண்டு தங்களை மட்டுமல்லாது தமது சமூகத்தையும் உன்னதமான ஒரு நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். கட்டுவன்புலம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் இன்றையதினம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
மாணவர்கள் பாடசாலை கல்வியுடன் மட்டும் நின்றுவிடாது விளையாட்டு போன்ற இணை பாடவிதான செயற்பாடுகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதனூடாகவே சிறந்த கல்வி சமூகமொன்றை கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் ஆரோக்யமானதொரு எதிர்காலத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும்.
ஒரு காலகட்டத்தில் கல்வித் தரத்தில் யாழ்ப்பாண மாவட்டம் மட்டுமன்றி வடபகுதி இந்நாட்டின் கல்விதரத்திலேயே முதலிடத்தில் இருந்ததையும் நாம் யாவரும் நன்கு அறிவோம். அக்காலப்பகுதியில்தான் இம்மாவட்டத்திலிருந்து பல கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் ஆன்மீக வாதிகளையும் மட்டுமன்றி உயர்நிலை தமிழ் அரசியல் தலைவர்களும் உருவாகியிருந்தார்கள்.
ஆனால் காலமாற்றத்தில் எம்நாட்டில் நிலவிய யுத்த மேகம் குடாநாட்டினதும் வடபகுதியினதும் கல்வித்தரத்தை மிகவும் பினதங்கிய நிலைக்கு கொண்டு சென்றிருந்ததை கல்வி திணைக்களத்தின் புள்ளிவிபரங்களுடாக நாம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
தற்போதைய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோக்குகின்ற போது யுத்தம் இடம்பெற்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் கல்வித் தரத்தினூடைய வீழ்ச்சியையும் பின்னடைவையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
அண்மையில் வந்த புலமைப்பரிசில் பரீட்சையிலும் கூட அதிகளவான மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்துள்ள போதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தை பின்தள்ளி கிளிநொச்சி மாவட்டம் முதன்மை பெற்றிருப்பதையும் நாங்கள் நோக்க வேண்டும்.
அந்தவகையில் எமது நாட்டில் கட்டாயக் கல்விக்கான வரையறை தற்போது 18 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இலவசமாக கிடைக்கப்பெறும் இந்த கல்வியை எமது மாணவர்கள் சிறந்த முறையில் கற்று தங்களை மட்டுமல்லாது தமது சமூகத்தையும் உன்னதமான ஒரு நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.
Related posts:
|
|