2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் –  பிரதமர் மோடி நம்பிக்கை!

Monday, December 9th, 2024

எதிர்வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இலக்கை எட்டுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தன்னார்வலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் குஜராத் மாநிலம், அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி அரங்கத்தில் நடைபெற்ற மஹோத்சவ நிகழ்ச்சியின்போது காணொளி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா ஆன்மிக அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே மோடி பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

“இந்திய கலாசாரத்தில் சேவை என்பது மிகப்பெரிய தர்மம். சேவை என்பது மிகப்பெரிய மதம். அந்த வகையில் பொதுச் சேவை என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கு சமம். இச் சேவையை திட்டமிட்டு செய்தால் அற்புத பலன் கிட்டும்.

2022 ஆம் ஆண்டு ரசிய, உக்ரெய்ன் போரின்போது அங்கு வசித்த இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு வர இந்த அமைப்பினர் உதவி செய்தனர். இந்த அமைப்பினர் சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனர். தன்னலமற்ற சேவை வழங்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஒரு பொது நோக்கத்துடன் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றிணையும்போது அது மிகப்பெரிய சக்தியாக மாற்றம் பெறும். எதிர்வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை அடுத்த 20 வருடங்களில் எட்ட வேண்டும். இந்த இலக்கை நோக்கி நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது.

மேற்குறித்த அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் சுமார் 50 ஆண்டுகளாக தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் சமூக மற்றும் ஆன்மிக சேவை செய்து வருவதை பாராட்டும் வகையில் இந் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

000

Related posts: