யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு!  

Sunday, June 1st, 2025

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாண நூலகத்தில், மாநகர சபையின் ஏற்பாட்டில்  நடைபெற்ற இந்நிகழ்வில் , மாநகர சபை ஆணையாளர்  பொது நூலக நூலகர் , நூலக உத்தியோகஸ்தர்கள் , வாசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நூலக எரிப்பு சம்பவத்தினை நாம் எமது அடுத்த சந்ததியினருக்கும் எடுத்து செல்ல வேண்டும். அந்த பணிகளை ஊடகங்களே செய்ய வேண்டும். இன்றைய நினைவு தினம் தொடர்பில் ஊடகங்களில் கட்டுரைகள் , செய்திகள் என்பன வெளி வராதமை கவலைக்கு உரியது என நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது; ஜூன் முதலாம் திகதியும் இரவு யாழ்ப்பாணத்திலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது; அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது.

சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தியது. தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது.

இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 44 ஆண்டுகள் ஆகின்றன.

000

Related posts: