முறையான தேடுதல் ஆணை இல்லை –  பொலிசாரின் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் போராட்டம்!

Tuesday, October 7th, 2025


…….
முறைப்படியான தேடுதல் ஆணை இல்லாது பொலிசார் முன்னெடுத்துவரும் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து வடக்கின் சட்டத்தரணிகள் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட  மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகளின் பிரசன்னத்துடன் குறித்த போராடம் யாழ்ப்பணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை (07) இடம்பெற்றது.

கடந்த 5 ஆம் திகதி முறையற்ற வகையில் காணி ஒன்றிற்கு உரிமம் ஏற்பாடு செய்துகொடுத்ததாக கூறி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவரின் இல்லத்தில் அவரை கைது செய்யும் முகதாவில் வீட்டிற்குள் நுழைந்த பொலிசார், குறித்த
வீட்டில் சட்டத்தினால் வழங்கப்பட்ட அதிகாரம் எதுவுமின்றி தேடுதல் நடத்தும் தோரணையில் அச்சுறுத்தலாக யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலீசார் நடந்து கொண்டனர்.

குறித்த சட்டமுரணான செயற்பாடை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி திருக்குமரன் – குறித்த போராட்டம் சட்டத்தரணி மீது நடவடிக்கை எடுப்பதை கண்டிப்பதானதல்ல. சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

ஆனால் அந்த சட்டத்தை சரியான தேடுதல் ஆணை இல்லாது மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் குறித்த செயற்பாடு பொலிசாரின் அத்துமீறிய செயற்பாட்டையே காட்டுகின்றது.

எனவே சட்டத்தரணிகளுக்கு எதிராக அல்லாது பொதுமக்களுக்க எதிராக, பொலிசார் முன்னெடுக்கும் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்தே இன்று வடக்கின் சட்டத்தரணிகள் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்துக்கு ஆதரவாக கிழக்கின் சட்டத்தரணிகளும் சில மணி நேரம் புறக்கணிப்பை செய்து எமது போராட்டத்தை வலுப்படுத்தினர். எனவே சட்டத்தை முன்னெடுக்க முனையும் பொலிசார் அதை சட்ட ரீதியாக முறையான வகையில் மேற்கொண்டு நீதியை வழங்க அல்லது குற்றவாளி என சந்தேகிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: