பொய் கூறி பயணிகளை ஏமாற்றும் இலங்கை போக்குவரத்து சபை – பாதிக்கப்பட்டவர் ஆதங்கம்!

Wednesday, December 4th, 2024

லங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர பேருந்துகளில் கடமை புரிவோர், பொய்களைச் சொல்லி பயணிகளை ஏமாற்றி அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி அன்று மாலை 6 மணியளவில் வவுனியா பிரதான பேருந்து நிலையத்தில், BN – NB – 9185 என்ற இலக்க அரச பேருந்து ஒன்று தரித்திருந்தது. நான் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய தேவை இருந்ததால் அவர்களிடம் வினவிய வேளை அந்த பேருந்து யாழ்ப்பாணம் செல்லும் என கூறி, என்னை பேருந்தில் ஏறுமாறு கூறினார்கள். அந்தப் பேருந்து நிலைய நான் பணத்தினை கொடுத்து பற்றுச் சீட்டினை பெற்றுக் கொண்டேன்.

பேருந்தில் ஏறி அமர்ந்த வேளை, தொடர் பிரயாணம் காரணமாக நான் கண்ணயர்ந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து கண் விழித்தவேளை பேருந்து கிளிநொச்சியை வந்தடைந்து. என்னை கிளிநொச்சியில் இறங்குமாறு கூறினார்கள். நான் யாழ்ப்பாணத்திற்கு தானே பற்றுச்சீட்டு பெற்றுள்ளேன். ஆகையால் என்னை யாழ்ப்பாணத்தில் தானே இறக்க வேண்டும் எனக்கூறினேன்.

அதற்கு அவர்கள் இந்த பேருந்து யாழ்ப்பாணம் செல்லாது. பின்னால் வருகின்ற பேருந்தில் சொல்லி இருக்கின்றோம். அதில் ஏறுங்கள் அவர்கள் உங்களை யாழ்ப்பாணத்தில் இறங்குவார்கள். இந்த பற்றுச்சீட்டை பயன்படுத்தி செல்லலாம் என எனக்கு கூறினர். அந்த பேருந்து கிளிநொச்சி டிப்போவிற்கு சொந்தமானது என்றபடியால் டிப்போவிற்கு சென்றது.

நானும் இறங்கி வீதியில் நின்றவேளை சிறிது நேரம் கழித்து கண்டி பேருந்து ஒன்று யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. நானும் அந்த பேருந்தில் ஏறிவிட்டு, முன்னர் எடுத்த பற்றுச்சீட்டினை காண்பித்தேன். அதற்கு அவர்கள் இல்லை நீங்கள் பற்றுச்சீட்டு பெறவேண்டும் என்று கூறினர். நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னர் மீண்டும் 260 ரூபா செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தேன். மொத்தமாக 766 ரூபாவை இந்த பயணத்திற்காக செவழித்தேன்.

இவ்வாறான செயற்பாடுகள் கொழும்பு பேருந்துகளிலும் இடம்பெறுவதாக பின்னர் அறிந்து கொண்டேன். கொழும்பில் இருந்து புறப்படும் கொழும்பு – வவுனியா இடையேயான போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள், யாழ்ப்பாணம் நோக்கி பயணிப்பதாக பொய்கூறி பயணிகளை ஏற்றிவிட்டு அவர்களை வவுனியாவில் இறக்கிவிட்டு அலைக்கழிப்பதுடன் அதிக செலவுகளையும் ஏற்படுத்துகின்றனர்.

இவ்வாறு பயணம் செய்கின்றவர்கள் மேலதிக பணம் இல்லாவிட்டால் அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்றைக்கு நாடு இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் ஒரு பயணத்திற்காக இரண்டு தடவை பற்றுச்சீட்டினை பெறுவதென்பது ஒரு மோசமான விடயம். இவ்வாறான செயற்பாடுகளானது அரச போக்குவரத்து சபையானது மக்கள் மீது அக்கறை காட்டாமையையும், ஏமாற்றுவதையும் எடுத்துக்காட்டுகின்றது.

இதுகுறித்து முறைப்பாடுகள் செய்தாலும் அவர்கள் எந்த அளவிற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை என்று கூறினாலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் தான் உள்ளன. எனவே இதற்கு இலங்கை போக்குவரத்து சபை நேரம் வடக்கு மாகாண ஆளுநரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: