கிழக்கு மண் தந்த அர்ப்பணிப்புமிகு தோழர் இன்று எம்மை பிரிந்து சென்றிருக்கின்றார் -அனுதாபச் செய்தியில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம்!

Sunday, December 8th, 2024

!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரான தோழர் கருணாவின்(முருகேசு ஞானபிரகாசம் – வந்தாறுமூலை, மட்டக்களப்பு) உயிரிழப்பு செய்தி மனவேதனையை ஏற்படுத்துகின்றது.

ஈழத் தமிழ் மக்களுக்கு கௌரவமான எதிர்காலத்தினை உருவாக்கும் எதிர்ப்பார்போடு, தமது இளமைகளை துறந்த ஆயிரக்கணக்கானோரில் தோழர் கருணாவும் ஒருவர்.

நடைமுறைச் சாத்தியமான அரசியல் வழிமுறையை இனங் கண்டு, எமது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்த 90 ஆம் ஆண்டுகளில் எம்மோடு தன்னையும்  இணைத்துக் கொண்ட தோழர் கருணா, அண்மையில் சுகயீனம் அடையும் வரையில்  ஓய்வின்றி உழைத்திருந்தார்.

மிகவும் இறுக்கமான காலங்களில் எல்லாம், கட்சியையோ, கட்சியின் தலைமையையோ சேதப்படுத்தும் வகையிலான தீயசக்திகள் எவையும் தன்னை தாண்டி நுழைந்து விடக்கூடாது என்பதில்  கண்ணும்  கருத்துமாக செயற்பட்டிருந்தார்.

இறுதிவரை என் மீதும் கட்சியின் செயற்பாடுகள் மீதும் தீராப் பற்றும், அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டிருந்து, தன் கடமையைச் செய்த தோழர். 

மன வலிமையும் புய வலிமையும் ஒருங்கிணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளை ஈழத் தமிழர்களின் விடியலுக்காக அளித்த பெருமைக்குரிய கிழக்கு மண் தந்த அர்ப்பணிப்புமிகு தோழர் இன்று எம்மை பிரிந்து சென்றிருக்கின்றார்.

பாரிய வெற்றிடத்தையும் ஆற்ற முடியாத துயரையும் ஏற்படுத்தி சென்றிருக்கும் அவருக்கு   எமது இதய அஞ்சலிகளை தெரிவிப்பதுடன்,

எமது அருமை தோழர் கருணாவின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கட்சியினருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்கிறேன்.

டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் நாயகம்,
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)

Related posts: