இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வு!
Monday, November 25th, 2024
இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது.
இராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை 1914 ஆம் ஆண்டுமுதல் 1964 ஆம் ஆண்டு வரை கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பின்னர் ஏற்பட்ட காலநிலை சீர்கேடு மற்றும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் போன்றவற்றின் காரணமாகக் குறித்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து குறித்த பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கான இடவசதிகள் தொடர்பில் தமிழக கடல்சார் துறையின் தலைவர் வள்ளலார் தலைமையிலான அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் அந்த நாட்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள தமிழக கடல்சார் துறையின் தலைவர் வள்ளலார் – இராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஆய்வுப் பணிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடல் வளம், பாதுகாப்பு மற்றும் கடற்றொழில் என்பவற்றுக்கு ஏற்றவகையில் கடல் போக்குவரத்து வழித்தடம் அமையும். முதற் கட்டமாக 100 முதல் 150 பயணிகள் பயணிக்கக்கூடிய வகையிலான கப்பலைச் சேவையில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், பாம்பன் குந்துகால், அக்னி தீர்த்தம், வில்லுண்டி தீர்த்தம், தனுஷ்கோடி குருசடை தீவு உள்ளிட்ட சுற்றுலா தளங்களைப் படகில் பார்வையிடும் வகையில் கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுவதாகத் தமிழக கடல்சார் துறையின் தலைவர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் வரையான பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


