ஆசிரியர்களில் 44 சதவீதமானோர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் – ரஜரட்ட பல்கலையின் அதிர்ச்சித் தகவல்!

Monday, June 29th, 2026


……
பாடசாலை ஆசிரியர்கள் தற்போது எதிர்நோக்கும் மிகக் கடுமையான மனநலப் பாதிப்பு குறித்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

நாட்டின் கல்வித் துறையின் முதுகெலும்பாகத் திகழும் ஆசிரியர்களில் 44 சதவீதமானோர் கடுமையான மன முறிவிற்கும் (Burnout) கடும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் நேரடித் தாக்கமே ஆசிரியர்களின் இந்த மனநிலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்காகத் தெரிவுசெய்யப்பட்ட 238 ஆசிரியர்களில் 81 சதவீதத்திற்கும் அதிகமானோர், தங்களது தற்போதைய மாதாந்த வருமானம் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டக்கூட போதுமானதாக இல்லை என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, 77 சதவீதமான ஆசிரியர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளைக் கூடக் குறைத்துக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், வருமானப் பற்றாக்குறையைச் சமாளிக்க 78 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் மேலதிக வருமான வழிகளைத் தேடி அலைய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பொருளாதாரச் சுமையால் ஏற்பட்டுள்ள இந்தத் தாக்கம் ஆசிரியர்களின் மனநலனில் நேரடி விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 30.4 சதவீதமானோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன், சமூகத்தில் இருந்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், நீடித்த கவலை (Anxiety) மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற பாதிப்புகளுக்கும் அவர்கள் உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எந்தவொரு சேமிப்பும் இல்லாத வறுமைச் சூழலும், நாளாந்தச் செலவுகளைக் கூடக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் இவர்களின் மனநலத்தை வெகுவாகச் சிதைத்துள்ளது.

ஆசிரியர்கள் எதிர்நோக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையைத் தீர்க்க, உடனடியாக அவசர நிதிக் கொள்கை மறுசீரமைப்புகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என மனநல மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோல, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு முறையான மனநல ஆலோசனைச் சேவைகளை (Counselling) வழங்குவது காலத்தின் கட்டாயத் தேவையாக மாறியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசியைத் தவணை முறையில் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும், ஆசிரியர்களின் அடிப்படைப் பொருளாதார மற்றும் மனநலத் தேவைகளுக்குப் பயனுள்ள நீண்டகாலத் தீர்வுகளை நோக்கியே அரசாங்கம் பயணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
000

Related posts: