அமெரிக்கத் தளங்கள் மீது பரந்த தாக்குதலே பதிலாக அமையும் – ஈரான் இராணுவம்!
Sunday, May 10th, 2026
ஈரானிய கப்பல்கள் அல்லது வணிகக் கப்பல்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்கள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படைத் தலைமையகம் எச்சரித்துள்ளது.
ஈரானின் அரசு நடத்தும் ‘ஐரிப்’செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
“ஈரானியக் கப்பல்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும், அமெரிக்கத் தளங்கள் மற்றும் எதிரிக் கப்பல்கள் மீதான பரந்த அளவிலான தாக்குதலே பதிலாக அமையும்” என்று புரட்சிக்கர கடற்படை கட்டளையகம் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப்பகுதியில் ஈரானிய மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு இடையே அவ்வப்போது சிறிய அளவிலான மோதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் குறித்த பகுதியில் கடும் பதற்றம் நிலவுகிறது.
எனினும், இந்த மோதல்களுக்கு மத்தியிலும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் இன்னும் அமுலில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் மற்றும் ஈரானின் இந்த பதிலடி எச்சரிக்கைகள் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
Related posts: