அப்பாவிப்குடும்பங்களின் வாழ்க்கையைச் சிதைக்காதீர்கள்- திரிபுபடுத்தப்பட்ட செய்தியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் வேண்டுகோள்!
Monday, June 15th, 2026
…..
இன்றைய காலச் சூழலில் ஊடகங்களூடான விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவைதான்.
ஆனால், உண்மைக்கு புறம்பான செய்திகளின் தாக்கம் எங்களைப் போன்ற அப்பாவிகளையும் எங்கள் குடும்பங்களையும் கடுமையாகப் பாதிப்பது பெரும் வருத்தமளிக்கிறது.
தவறான செய்தியிடலால் எங்களுக்கு நடந்த இந்த அவலம் இனி ஒருபோதும் வேறெவருக்கும் நடக்கக் கூடாது என்பதே எமது வேண்டுகோளாக இருக்கின்றது என திரிபுபடுத்தப்பட்ட செய்தியால் பாதிப்புற்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ் ஊடக அமையத்தில் தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியின் பாதுகாவலரையும், அவருடன் தொடர்புடைய ஒருவரையும் அவதூறு செய்யும் வகையில் சில சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியான செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து (14) யாழ் ஊடக அமையத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த ஊடக சந்திப்பை முன்னெடுத்திருந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் கூறுகையில்
பண்டத்தரிப்பு பகுதியில் நீண்ட காலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி ஒன்று, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து அக்காணியை பிரதேச சபை பொறுப்பேற்றிருந்தது.
இந்நிலையில், அந்தப் பிரதேச சபை காணியில் இருந்த இரும்புப் “கேற்” ஒன்று அண்மையில் களவாடப்பட்டிருந்தது.
இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததுடன், பிரதேச சபையின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்நிலையில் குறித்த காணியின் பாதுகாப்புக்காக பிரதேச சபையினால் 24 மணிநேரமும் சிற்றூழியர் ஒருவர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று விசாரணை செய்வதற்காக பொலிசார் அக்காணிக்கு செல்ல இருந்ததை கருத்திற் கொண்டு குறித்த சிற்றூழியரை முழுமை அங்கு இருக்குமாறு பிரதேச சபை அதிகாரியால் அறிவுறுத்தப்பட்டிருந்ததால் கடமையில் இருந்த ஊழியருக்கு அவரது மனைவி உணவு கொண்டு சென்றுள்ளார்.
இன்னிலையில் அங்கு செய்திக்காக வந்ததாகக் கூறிய ஊடகவியலாளர் ஒருவர் மனைவியை மையப்படுத்தி, சில இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வதந்தியைப் பரப்பியுள்ளன.
குறிப்பாக அந்தக் காணிக்குள் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆணும் பெண்ணும் இருந்தனர் என உண்மைக்கு புறம்பாக, மிகைப்படுத்தப்பட்ட ரீதியில் செய்தி பரப்பப்பட்டுள்ளது
வயிற்றுப் பிழைப்புக்காகவும், கடமைக்காகவும் நேர்மையாக உழைக்கும் தங்களை இலக்கு வைத்து பரப்பப்பட்ட இந்த அபாண்டமான செய்தி, தங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளதுடன் இரு குடும்பங்களில் பெரும் தகராற்றையுன் மன வேதனையையும் தந்துள்ளது.
குறிப்பாக பொறுப்பற்ற சில சமூக ஊடகங்களின் இவ்வாறான செயற்பாடுகள், எமது குடும்பத்தின் நிம்மதியையும், குறிப்பாக ஒரு கர்ப்பிணிப் பெண்ணான எனது மனநலனையும் சமூக அந்தஸ்தையும் கடுமையாக பாதித்துள்ளது.
எமது நிலையை உணர்ந்து குறித்த ஊடகர் இனியாவது பொறுப்புடன் செயற்பட வேண்டும் அவர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


