இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்கத் தயாராகும் அரசு – மக்கள் மத்தியிலான பணப்புழக்கத்துக்கு இது உதவும் என சமுர்தி மற்றும் நுண்நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, August 16th, 2020

வரவுசெலவுத்திட்டத்துக்கு முன்பதாக 1600 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம் பழைய கொடுப்பனவுகள் செலுத்தப்படுவதுடன் பொருளாதாரத்தை மீண்டும் ஆரம்பிக்கமுடியும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்த யோசனை விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன்மூலம் கடந்த ஒரு வருட காலமாக தாமதிக்கப்பட்டு வந்த 200 பில்லியன் ரூபா, நிர்மாணங்களுக்கான கொடுப்பனவுகளுக்கு செலுத்தப்படும்.

அத்துடன் 15 பில்லியன் ரூபா ௲பாடசாலை நிர்மாண நிலுவைக் கொடுப்பனவுகளுக்காக செலுத்தப்படவுள்ளது.

இந்தநிலையில் இடைக்கால கணக்கறிக்கையின் மூலம் முழு கொடுப்பனவுகளையும் செலுத்தமுடியாது. எனினும் மக்கள் மத்தியிலான பணப்புழக்கத்துக்கு இது உதவும் என்று சமுர்தி மற்றும் நுண்நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த பெப்ரவரியில் அரசாங்கம் 367 பில்லியன் ரூபாவுக்கான இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்தபோதும் அதற்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: