எமது இணக்க அரசியலூடான செயற்பாடுகள் இன்று வரலாற்று சாட்சிகளாக மிளிர்கின்றன – டக்ளஸ் தேவானந்தா!

கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளைக் கொண்டு கடந்த காலங்களில் மக்களுக்கான தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு முடியுமானவரையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடமராட்சி, தொண்டமானாறு, அரசடி, கலைவாணி சனசமூக நிலையத்தில் நேற்றையதினம் (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில் கடந்த காலங்களில் எமது இணக்க அரசியல் ஊடாகவும் அரசியல் சாணக்கியத்தின் ஊடாகவும் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை மக்கள் நலன்சார்ந்த பொருளாதார மற்றும் அபிவிருத்தி செயற்றிட்டங்களை முடியுமானவரையில் முன்னெடுத்திருந்தோம்.
இவ்வாறு நாம் இணக்க அரசியலை முன்னெடுத்தபோது எம்மைத் துரோகிகள் எனவும் தீண்டத்தகாதவர்கள் எனவும் கூறிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்று எமது வழிமுறைக்கே வந்துள்ளனர். நாம் மக்கள் நலன்சார்ந்தும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலேயே திட்டங்களை வகுத்து முன்னெடுத்திருந்த போதிலும் கூட்டமைப்பினர் மாறாக இணக்க அரசியலைப் பயன்படுத்தி தமக்கான சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமன்றி அவர்களிடம் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் கிஞ்சித்தும் அக்கறையோ ஆற்றலோ இல்லாத நிலையே காணப்படுகின்றது.
அவர்களது இணக்க அரசியலின் ஊடாகவே எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் மற்றும் மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைமைப் பொறுப்புக்களையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன் தமது பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதிலும் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.
அத்துடன் 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் , தேசியக் கூட்டு மற்றும் பிராந்தியக் கூட்டுகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் இதன்போது தெளிவுபடுத்தினார்.
இதனிடையே மக்களது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்), கட்சியின் வலி வடக்கு நிர்வாக செயலாளர் அன்பு, கட்சியின் வடமராட்சி பிரதேச நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மற்றும் கட்சியின் பருத்தித்துறை பகுதி நிர்வாக செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.
Related posts:
|
|