ஆர்ப்பாட்டக் காரர்களால் முற்றுகையானது உலகின் பரபரப்பான விமான நிலையம் !
Tuesday, August 13th, 2019
ஜனநாயகத்துக்கு ஆதரவாக ஹொங்கொங்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் போராட்டத்தினால் ஹொங்கொங் விமான நிலையம் முடங்கியது. போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டமையால் சகல விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டன.
உலகத்தில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹொங்கொங் விமான நிலையத்தின் சகல விமானங்களும் இரத்துச் செய்தமையால் பயணிகள் பலரும் திண்டாட்டத்துக்குள்ளாகினர். 5000 இற்கும் அதிகமான போராட்டக்காரர்கள் விமான நிலையத்துக்குள் அமர்ந்து தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
‘ஹொங்கொங் பாதுகாப்பானது இல்லை’, ‘பொலிஸார் குறித்து வெக்கமடைகிறோம்’ போன்ற பொலிஸாருக்கு எதிரான கோஷங்களைத் தாங்கிய பதாதைகளுடன் போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
ஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு எதிராக ஜூன் இறுதியில் போராட்டம் தொடங்கியது. போராட்டங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஹொங்கொங் அரசு அந்தச் சட்டத்தை தற்காலிகமாக கைவிட்டதாக அறிவித்தபோதும் போராட்டங்கள் இடைவிடாது முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


