முல்லைத்தீவு இளைஞனின் கொலை தொடர்பில் யாழில் ஒருவர் கைது!

Saturday, June 2nd, 2018

கடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட 27 வயதுடைய வ.சதாநிசன் என்ற இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய சுன்னாகத்தினை சேர்ந்த சந்தேகநபரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் உள்ள பனங்கூடல் ஒன்றுக்குள் கடந்த 23ஆம் திகதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் குறித்த இளைஞனின் உடலம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நுண்புலனாய்வு பரிசோதகர்கள், சட்டவைத்திய அதிகாரி, நீதிபதி முன்னிலையில் உடலம் காணப்பட்ட இடங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி உடலத்தினை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

பரிசோதனையில் வெளியான மருத்துவ அறிக்கையில் கழுத்தில் கூரியஆயுதத்தால் வெட்டப்பட்டு அதிகளவான குருதிப்போக்கு காரணமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையுடன் தொடர்புடையவரை கைதுசெய்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரி உட்பட குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகளையும் தேடுதல்களையும் முன்னெடுத்துள்ளார்கள்.

உயிரிழந்தவரின் வயிற்றின் வலதுபக்கத்தில் கடித்த காயம் ஒன்று காணப்பட்டுள்ளது. இதனை வைத்து முல்லைத்தீவு பொலிஸார் ஆராய்வினை மேற்கொண்டுள்ளார்கள். இதன்படி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் மதுபோதையில் தகராறு மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக கடிக்கப்பட்டதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனடிப்படையில் செல்வபுரத்தினை சேர்ந்த குறித்த நபரை சென்று பார்த்தபோது அவர் அந்த பகுதியில் இல்லாத நிலையில் அவரை கண்காணிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த நபர் முல்லைத்தீவு பகுதிக்குள் வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பிரகாரம் முல்லைத்தீவில் இருந்து வட்டுவாகல் பாலம் ஊடாக நடையில் சென்ற குறித்த சந்தேக நபரை  பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து உயிரிழந்த இளைஞனின் தலைக்கவசம், பணப்பை மற்றும் கொலைக்காக பயன்டுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட கொலையாளி பயன்படுத்திய பொருட்களை மீட்டுள்ளதுடன் குறித்த கொலைக்குற்றவாளி உயிரிழந்த இளைஞனின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியினை அறுத்து யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள அவரது அக்காவிடம் கடையில் அடைவு வைத்து தருமாறு கொடுத்துள்ளார்.

இந்த கொலை மற்றம் கொள்ளைக்கு உதவியதாக கூறி முல்லைத்தீவு பொலிஸார் யாழ்ப்பாணம் மின்சாரநிலைய வீதி சுன்னாகத்தில் வசிக்கும் குற்றாவாளியின் அக்காவின் வீட்டிற்கு சென்று விசாரித்து அவரை கைதுசெய்துள்ளதுடன் குறித்த தங்கச் சங்கிலியையும் மீட்டு வந்துள்ளார்கள்.

குறித்த இரண்டு குற்றவாளிகளையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 04 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: