இலங்கையில் 11 ஆயிரம் குழந்தைகள் விற்பனை!
Friday, September 22nd, 2017
இலங்கையில் பிறந்த 11 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நெதர்லாந்தின் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளுல் சுமார் 6 ஆயிரம் குழந்தைகள் நெதர்லாந்து பெற்றோர்களுடன் வாழ்ந்து வருவதாகவும் அந்த தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஏனையவர்கள் சுவீடன், டென்மார்க், ஜேர்மன் மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் வாழ்ந்து வருவதாக குறித்த தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தாய்மார்களால் ஈன்றெடுக்கப்பட்ட குறித்த குழந்தைகளை விற்பனை செய்வதற்கு போலியான ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த தகவலை வெளியிட்ட நெதர்லாந்து தொலைக்காட்சி நிறுவனத்திடம் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இது தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார்
இதற்கமைய, தற்போது குறித்த நாடுகளில் வசித்து வரும் அவர்களின் இலங்கை பெற்றோரை அடையாளங் காண்பதற்கான ஒத்துழைப்பை வழங்க தயார் என நெதர்லாந்து தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்காலத்தில் மரபணு ஆய்வு முறைமை ஒன்றை உருவாக்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|