அரியாலை துப்பாக்கிச் சூடு: வாகனங்களை விடுவிப்பதற்கு யாழ்ப்பாண நீதிமன்று மறுப்பு!

Thursday, March 8th, 2018

யாழ்ப்பாணம் அரியாலையில் இளைஞன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வழக்கில், சான்றுப் பொருள்களான உந்துருளி, முச்சக்கரவண்டி என்பனவற்றை விடுவிக்க யாழ்ப்பாண நீதிவான் மன்று நேற்று மறுத்தது. உரிய உறுதிப்படுத்தல் கடிதம் சமர்ப்பித்தால் மாத்திரமே வழங்கலாம் என்று நீதிமன்று கூறியுள்ளது.

அரியாலையில் கடந்த டிசெம்பர் 28 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டில் அதே இடத்தைச் சேர்ந்த டொன்பொஸ்கோடினேசன் (வயது-24) என்பவர் கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்திலுள்ள சிறப்பு அதிரடிப்படையினரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளனர். அவர்களது வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மன்றில் முற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் சான்றுப்பொருளான வாகனங்கள் இரண்டையும் விடுவிக்குமாறு கோரினர்.

குறித்த வாகனங்களை விடுவிப்பதாயின் பாதுகாப்பு அமைச்சின் கடிதம் பெறப்பட்டுச் சமர்ப்பித்தல் வேண்டும். அதுமட்டுமன்றி குறித்த வாகனங்களைப் பொறுப்பெடுப்பவர் யார் என்பது உள்ளிட்ட விவரங்களுடன் கடிதம் மூலம் சமர்ப்பித்தல் வேண்டும் என்று நீதிவான் சி.சதீஸ்தரன் நிபந்தனை விதித்தார். இந்த வழக்கிலுள்ள சந்தேகநபர்கள் இருவரினது விளக்கமறியல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

Related posts: