அரச மொழிக் கொள்கையை அமுலாக்குவதற்கு 3,300 பேர் இணைப்பு!

Wednesday, May 30th, 2018

அனைத்து அரச நிறுவனங்களிலும் அரச மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகத் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3,300 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இது தொடர்பில் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக விண்ணப்பிக்கும் தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மொழிக்கு மேலதிகமாகச் சிங்கள மொழியில் சித்தியடைந்திருக்க வேண்டும். அதேபோல் சிங்கள விண்ணப்பதாரர்கள் சிங்கள மொழிக்கு மேலதிகமாகத் தமிழ் மொழியில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

இந்தப் பதவிக்காக இணைத்துக் கொள்ளப்படுபவர்கள் பயிற்சி வழங்கப்பட்டு அனைத்து அரச அலுவலகங்களிலும் இணைத்துக் கொள்ளப்படுவர்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் இந்த நாட்டின் அரச மொழிகளாகச் சட்டமாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பெரும்பான்மையான அரச நிறுவனங்களில் இதற்கமைவாகப் பணிகள் இடம்பெறுவதில்லை.

இதனால் தமது பிரச்சினைகளுக்காகத் தாய்மொழியில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகச் செல்லும் பெரும்பாலானோர் இரண்டு மொழிகளை அறிந்த அதிகாரிகள் அந்த நிறுவனங்களில் இல்லாமையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இதற்குத் தீர்வாக 2008 ஆம் ஆண்டிலிருந்து அரச அதிகாரிகளுக்குத் தமிழ்மொழி தொடர்பிலான 12 நாள் வகுப்புகள் நடத்தப்பட்டன. இது வெற்றிபெறவில்லை.

இதன் காரணமாக பிரதேச செயலாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் மொழி உதவி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: