நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, October 7th, 2016

இரணைமடு குள அபிவிருத்தி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நன்னீர்  மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மக்களின் நலன்கருதி அவர்களால் தங்களது தொழிலை மீண்டும் ஆரம்பிக்கும் வரையில் ஏதேனும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் அமந்துள்ள இரணைமடு குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 5200 மில்லியன் ரூபா செலவில் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இதன் பணிகள் 2017ம் வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிய வருகிறது. இத் திட்டம் முன்னெடுக்கப்படுவதானது எமது மக்களுக்கு பாரிய பயனுள்ளதாக அமையும். அதே நேரம், இத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர், இரணைமடு குளத்தால் பயனடைகின்ற அனைத்து மக்களதும் கருத்துக்கள் கோரப்பட்டு, அதற்கமைய இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிய வரவில்லை. குறிப்பாக, இக்குளத்தின் மூலமான வாழ்வாதாரத்தைக் கொண்டிருக்கும் கமக்கார மக்களது கருத்துக்கள் அறியப்பட்ட அளவில், நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மக்களது கருத்துக்கள் அறியப்பட்டு, அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் எதுவும் திட்டமிடப்பட்டதாகத் தெரிய வரவில்லை.

இரணைமடு மேற்குக் கரை பகுதியில் சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 132 குடும்பங்களும், கிழக்குக் கரை பகுதியில் 85 குடும்பங்களும், மேலும் சுமார் 35 வரையிலான பெண் தலைமைத்துவக் குடும்பங்களும், சுமார் 45 வரையிலான மீன் வர்த்தகர்களும் இந்த குளத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக மேற்படித் தொழிலையே தங்களது ஜீவனோபாயமாகக் கொண்டிருக்கும் நிலையில், வேறு மாற்றுத் தொழில் முறைகளுக்குப் பழக்கப்படாதும் இருக்கின்றனர். இந்த நிலையில் 2017ம் வருட இறுதியில் இக்குளத்தின் அபிவிருத்திப் பணிகள் முடிவுறும் எனக் கூறப்பட்டாலும்,  அதன் பின்னர் நீர் சேமிக்கப்பட்டு, மீன் குஞ்சுகள் இடப்பட்டு, அவை வளரும் வரையில் இவர்களால் தொழில் செய்ய இயலாத நிலையே உருவாகியுள்ளது. அதுவரையில் இம்மக்களது வாழ்வாதாரம் கருதி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன், இக் குளத்தின் நீர் அடிக்கடி திறந்துவிடப்படுவதால், தேங்கியிருக்கும் மீன் குஞ்சுகள் குளத்தைவிட்டு வெளியேறுகின்ற நிலை தொடர்வதால், அதற்குரிய பாதுகாப்பு வலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் வறுமையை போக்கவும், வேலைவாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும்- ...
வடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தும் கேந்திரமாக மாறக் காரணம் என்ன? – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ட...
அதிக வருமானம் ஈட்டும் துறையாக தபால் துறையை மாற்றியமைக்க வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வலுவிழந்த பொருளாதாரத்தின் மத்தியில் ஏற்றுமதிகளின் மந்தமும், இறக்குமதிகளின் வேகமும் - நாடாளுமன்ற உறுப...
மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் எனக் கூறிக்கொண்டாலும் அவ்வாறான நிலைமை இன்னமும் ஏற்படவில்லை எ...