அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழிவகைகள் இறுக மூடப்பட்டு கிடக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு

Friday, May 24th, 2019

இந்த நாட்டின் எதிர்கால எழுச்சியினை பொருளாதார அடிப்படையில் கொண்டு கட்டியெழுப்புகின்றபோது, மிகவும் கடுமையான உழைப்பினை நேர்மையான தன்மையுடன் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியமே முன் நிற்கின்றது என்றே கூற வேண்டும்.
அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழிவகைகள் ஏற்கனவே விரிவாக்கம் பெறாது இருந்து வந்துள்ள நிலையிலேயே, கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், விரிவாக்கம் பெற வேண்டியிருந்த அந்த வழிவகைகளும் இன்று இறுக மூடப்பட்டு கிடக்கின்ற ஒரு நிலை ஏற்பட்டள்ளது.
எனவே, ஒரு பக்கம் நாட்டிற்கான அந்நியச் செலாவணிக்குரிய மார்க்கங்களை பலப்படுத்த வேண்டிய அதே நேரம், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்பதும் மறு பக்கத்தில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டு நிலைமையில், பொருளாதார நெருக்கடியின் சுமையினை ஏழை மக்கள் மீதும், தொழிலாள மக்கள் மீதும் திணிக்காது இருகக் கூடிய நிலைமைகள் இங்கே தோற்றுவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.
பொளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு தற்போது வாய்ப்புகள் குறைவாகவுள்ள நிலையில், பயங்கராவதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்கின்ற மகுடத்தை வைத்துக் கொண்டு, சமூக மற்றும் வாழ்க்கைகக்குரிய மக்களது தேவைகளின் மீது ஒடுக்குதல்கள் மேற்கொள்ளப்படாதிருத்தல் வேண்டும்.
தற்போதைய பயங்கரவாதத்தின் ஒருங்கிணைந்த அழுத்தமமானது, பொருளாதாரத்தை சீர்குலைப்பதும், பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தைக் குறைப்பதுமாகும் என்றே சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது, செலுத்த வேண்டிய நிலுவைகள், அந்நிய நிதி நிலைமை மற்றும் நிதி மானியங்கள் தொடர்பில் பாதிப்பு மிக்க அழுத்தங்களைப் பிரயோகிக்கும் என்பதுடன், இதன் ஊடாக வெளிவாரி பாதுகாப்பற்றத் தன்மை அதிகரிப்பதானது இதன் மிகப் பாரிய பாதிப்பாக அமையும் என்றும் சுட்டிக்காட்டப்படுவதை அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலத்திற்குள் வர்த்தக ரீதியலான நம்பிக்கையானது இந்த நாட்டில் மிகப் பாரிய வீழ்ச்சி நிலையை கடந்த ஏப்ரல் மாதத்திலேயே கண்டுள்ளதாக புள்ளவிபரங்கள் கூறுகின்றன. இது, பின்னரான காலங்களில் மேலும் வீழ்ச்சி நிலையினை அடையக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்ற நிலைமையில், அரசாங்கம் மிக அவதானமான முன்னெடுப்புகளை வீழ்ச்சியுற்ற மற்றும் ஸ்தம்பித்துள்ள துறைகள் சார்ந்து – குறிப்பாக பொரளாதாரத்தின் முக்கிய துறைகள் சார்ந்து மேற்கொள்ள வேண்டியத் தேவை இருக்கின்றது.
2018ஆம் ஆண்டின் மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையின் பிரகாரம், 2017ஆம் ஆண்டில் நூற்றுக்கு 3.4 வீதமாக இருந்துள்ள பொருளாதார வளர்ச்சியானது கடந்த வருடத்தில் 3.2 வரையில் வீழ்ச்சி கண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன், கடந்த ஆண்டில் 4.4 டொலர் பில்லியனாக இருந்துள்ள உல்லாசப் பிரயாணத்துறையின் வருமானமானது இந்த வருடத்தில் 1.5 டொலர் பில்லியன்களால் வீழ்ச்சியுறக் கூடும் என எதிர்வுகள் கூறப்படுகின்றன.
இந்த நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற மூன்றாவது முக்கிய துறையான உல்லாசப் பிரயாணத் துறையின் வீழ்ச்சியானது அந்நியச் செலாவணி ஈட்டலில் பெரும் பாதிப்பினை உண்டு பண்ணக்கூடும்.
தற்போது கிடைக்கின்ற தகவல்களைப் பார்க்கின்றபோது, அநேகமான ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளை ஒதுக்கீடு செய்கின்ற ஏற்பாடுகள் எதிர்வரும் ஒக்ரோம்பர் மாதம் வரையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
அதேநேரம், வெளிநாட்டு முதலீடுகளிலும் பாரிய வீழ்ச்சி நிலையே காணப்படுகின்றது. மத்திய வங்கியின் அறிக்கை பிரகாரம் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலின் பின்னர் 3.3 பில்லியன் ரூபா நாட்டுக்கு வெளியில் சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது. அதையும் இணைத்து பார்க்கின்றபோது, இதுவரையில் சுமார் 10 பில்லியன் ரூபா ஆவணமய முதலீடுகள் வெளியில் சென்றுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளையில், இந்த வருடத்தின் வெளிநாட்டுக் கடன்கள், 5 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ள நிலையில், அதில் 1.5 பில்லியன் டொலர்களை செலுத்துவதற்காக இந்தியாவிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் கடன்கள் பெறப்பட்டுள்ள நிலையில், சிதைவடைந்துச் செல்கின்ற வெளிநாட்டு சொத்துக்களுக்கு முண்டு கொடுப்பதற்கென கடந்த மார்ச் மாதம் மேலும் 2.4 டொலர் பில்லியன் அரச பிணைமுறிகள விற்பனை மூலமாகப் பெறப்;பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
அந்த வகையில் பாரக்கின்றபோது, மிகவும் அவதானமானதொரு பயணத்தின் தேவையையே விரைவானதாக நாடு எதிர்கொண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும்.
ஒரு பக்கத்தில் கடன் செலுத்துகைகளுக்காக மேலும் கடன் பெற வேண்டிய நிலையிலேயே இருந்து வருகின்ற நிலையில், தேசிய உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பிலான முயற்சிகள் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியங்கள் மிகையாகவே ஏற்பட்டிருக்கின்றன.
அந்நியச் செலாவணியின் பிரதான வழிகளான உல்லாசப் பிரயாணத்துறையின் வீழ்ச்சி என்பது பெரும் பாதிப்பினை உண்டு பண்ணிக் கொண்டிருக்கின்ற அதே நேரம், வெளிநாட்டு முதலீட்டாளர்களது பங்களிப்புகள் தொடர்பிலும் வலுவான எதிர்பார்ப்புகளை கொள்வதற்கு இயலாது என்றே தற்போதைக்கு கூற வேண்டியுள்ளது.
எனினும், காலப் போக்கில் இத்துறைகள் விருத்தி பெற வேண்டுமாயினும், அதற்குரிய ஏற்பாடுகள் இப்போதிருந்தே துரித கதியில் மேற்கொள்ளப்படவும் வேண்டியிருக்கின்றது என்பதையும் அவதானத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றேன்.

Related posts: