இத்தாலியின் பிரம்மாண்ட பாலம் வெடிவைத்து தகர்ப்பு!

Saturday, June 29th, 2019

இத்தாலியில் கடந்த ஆண்டு நடந்த விபத்தில், 43 உயிர்களை பறித்த நெடுஞ்சாலை பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் ஜெனோவா நகரம் மலைகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. அந்நகரில் உள்ள நெடுஞ்சாலையில் மோராண்டி எனும் பாலத்தின் ஒரு பகுதி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திடீரென்று இடிந்து விழுந்தது.

இந்த கோர விபத்தில் 43 பேர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக பலியாகினர். பாலத்தின் மேல் இருபுறமும் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள், 148 அடி உயரத்தில் இருந்து மளமளவென கீழே விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த பாலத்தை வெடி வைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, விபத்து நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆக உள்ள நிலையில், மோராண்டி பாலம் அதிகாரிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

இதற்காக அப்பகுதிக்கு அருகில் சுற்றி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர், சுமார் 4500 டன் எடைகொண்ட இரும்பு கம்பிகள் மற்றும் சிமெண்ட் கலவைகளால் கட்டப்பட்ட இந்த பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.இதுதொடர்பான காட்சிகளை பல்வேறு ஊடகங்கள் நேரடிக் காட்சியாக ஒளிபரப்பின.

Related posts: