அமெரிக்க விமானத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

Wednesday, January 8th, 2020


ஈராக்கில் குறைந்தது இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

அல்-அசாத் மற்றும் இர்பிலில் குறைந்தது தங்களின் இரண்டு நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் அமைப்பு கூறியுள்ளது.

அல்-அசாத் விமானதளத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். இது குறித்த தகவல்கள் ஜனாதிபதி டிரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் ஜனாதிபதி நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்டுடு என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம் ஓர் அறிக்கையில் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று டிரோன் விமான தாக்குதலில் இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடிதான் இந்த தாக்குதல் என்று ஈரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பயங்கரவாத ராணுவத்துக்கு தங்களின் படைத்தளங்களை தந்துள்ள அதன் நேச நாடுகள் அனைத்தையும் நாங்கள் எச்சரிக்கிறோம். ஈரான் மீதான வலிய தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆரம்ப புள்ளியாக அமையும் எந்த ஒரு பிராந்தியத்தின் மீதும் குறி வைக்கப்படும்டுடு என்று ஈரானின் அரசு செய்தி முகமையான ஐஆர்என்ஏ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. அல்-அசாத் தளத்தின் மீது தாக்குதல் நடந்ததற்கு சற்று நேரத்திலேயே இர்பில் பகுதியில் உள்ள அமெரிக்க விமானத்தளம் மீது ஷெல் குண்டு தாக்குதல் நடத்துள்ளதாக அல் மாயாதீன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் ஈரான் செல்வாக்கு அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்கியவர் காசெம் சுலேமானீ. மேலும் அந்நாட்டின் அதிஉயர் தலைவரான அயதுல்லா காமெனிக்கு அடுத்ததாக இரண்டாவது அதிகாரமிக்க நபராக சுலேமானீ விளங்கினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இரானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்தார். அதற்கு இரானும் தனது பாணியில் பதிலளித்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் இராக்கில் இயங்கி வரும் ஈரானிய ஆதரவு பெற்ற ஆயுதக்குழு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்தது.

Related posts: