விண்வெளியில் ஒரு மாபெரும் அதிசயம்!

Thursday, April 11th, 2019

முதல் முறையாக விண்வெளியில் ஒரு அதிசயம் நிஜமாகியுள்ளது. பிரமாண்ட கருந்துளை புகைப்படத்தை வெளியிட்டு விஞ்ஞானிகள் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா.

அண்டவெளியில் காணப்படும் இந்த கருந்துளையின் புகைப்படம் வரலாற்றில் முதல் முறையாக இப்போதுதான் வெளியாகியுள்ளது. இந்த கருந்துளையின் உருவம் என்பது 40 பில்லியன் கிலோமீட்டர் குறுக்கு வட்டதோற்றமுடையது. பூமியின் அளவை விட 3 மில்லியன் அளவுக்கு பிரமாண்டமானது.

ஒளியை கூட விடாது விஞ்ஞானிகள் இதை மான்ஸ்டர் (Monster) என்று வியப்புடன் குறிப்பிடுகிறார்கள். புகைப்படத்தில் உள்ள இந்த கருந்துளை ஐந்து கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள எம்-87 என்ற நட்சத்திர கூட்டத்தில் உள்ளதாம். இந்த பகுதியில் ஒளி கூட ஊடுருவ முடியாது. ஒளியை கூட உள்ளிழுத்துக் கொள்ளும் அளவுக்கு ஈர்ப்பு விசை கொண்டது அந்த கருந்துளை.

நமது மொத்த சூரிய குடும்பத்தின் அளவை விட இந்த கருந்துளை மிகப்பெரியது. சூரியனைவிட 6.5 பில்லியன் அளவுக்கு கூடுதல் நிறை (Mass) கொண்டது. இதன் ஒளியானது, நமது சூரிய குடும்பத்திலுள்ள அனைத்து நட்சத்திரங்களின் ஒளியைவிடவும் அதிக ஒளி பொருந்தியதாகும்.

லண்டன் யுனிவர்சிட்டி காலேஜின் ஆய்வாளர் டாக்டர். ஜிரி யூன்சி கூறுகையில், தியேரி அடிப்படையில் விஞ்ஞானிகள் வகுத்து வைத்திருந்த உருவத்தை இந்த கருந்துளை புகைப்படம் ஒத்துப்போவது ஆச்சரியமாக உள்ளது.

விஞ்ஞானி ஐன்ஸ்ட்டீனின் கணிப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது என்று தெரிவிக்கிறார்

கருந்துளை என்பது ஒரு பிரமாண்ட பரப்பளவு. அதில் எந்த ஒரு பொருளும், ஏன் ஒளி கூட ஊடுருவி செல்ல முடியாது. * பெயர்தான் துளையே தவிர, அவை காலியாக இருப்பதில்லை. அவை ஒரு சிறிய பகுதிக்குள் அடர்த்தியான விஷயங்களை பொதிந்திருக்கிறது.

கருந்துளையின் ஒரு பகுதி பாயின்ட் ஆப் நோ ரிட்டர்ன் என்று அழைக்கப்படுகிறது. அங்கு சென்றால் யாருமே திரும்பி வர முடியாது.

அதன் ஈர்ப்பு விசைக்குள் சிக்கி சின்னாபின்னமாகிவிடுவார்கள். ஆனால், ஒரு மனிதன் அந்த பகுதிக்குள் சென்றால் எப்படி உயிரிழப்பார் என்பதை இதுவரை எந்த விஞ்ஞானியாலும் அறுதியிட்டு கூற முடியவில்லை.

ஒரு டெலஸ்கோப்பால் இந்த கருந்துளையை படம் பிடித்துவிட முடியாது என்பதை விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர்.

எனவே, ஹார்வார்ட் – ஸ்மித்சோனியான் மையத்தின் பேராசிரயர் ஷெபர்ட் டோலேமேன் தலைமையிலான குழு 8 தொடர்புடைய டெலஸ்கோப்புகளை கொண்டு ஒருங்கிணைந்து இந்த படத்தை எடுப்பதில் வெற்றி கண்டுள்ளது.

200 விஞ்ஞானிகளை உள்ளடக்கிய குழு, டெலஸ்கோப்புகளை, எம்87 நட்சத்திர கூட்டத்தை நோக்கி திருப்பி, 10 நாட்களாக கருந்துளையை படம் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதன் விளைவாக, ஒரு தலைமுறைக்கு முன்பாக, இயலாது என கூறப்பட்ட இந்த சாதனையை விஞ்ஞானிகள் நடத்திக் காட்டியுள்ளனர்.

வாஷிங்டன்னில் இன்று, ஷெப் டோலேமேன் நிருபர்களை சந்தித்தபோது, கருந்துளை குறித்த தங்கள் கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொண்டார்.

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தியேரிப்படி, இடம், காலம் என அனைத்துமே ஒரு கட்டத்தில் கனவை போல அழிந்து போகும்.

இந்த கருந்துளையும், அனைத்தையும் மாயமாக்கும் வல்லமை கொண்டது என்பதால், ஐன்ஸ்டீனை மீண்டும் நினைவுபடுத்த வழிவகுத்துள்ளது.

Related posts: